இலங்கையில் கைதாகியுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதியின் வெளிவிவகாரங்களுக்கான ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ண தெரிவிக்கையில்,ஜெனீவா பிரேரணைக்கு இந்தியா ஆதரவு வழங்காமல் “அமெரிக்க பிரேரணை இலங்கையின் முன்னேற்றத்துக்கு இணங்கியிருப்பதாக அமைந்துள்ளது” என மாநாட்டில் இந்தியா தெரிவித்திருந்தது. இலங்கை தொடர்பில் இந்தியா கொண்டுள்ள நம்பிக்கைக்கு பிரதியுபகாரமாகவே தமிழக மீனவர்களை ஜனாதிபதி அவர்கள் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார் என அமைச்சர் ராஜித தெரிவித்தார்.
இதன்படி தற்போது இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 98 தமிழக மீனவர்களும் விடுதலை செய்யப்பட வுள்ளனர். எனினும் 98 பேரின் விடுதலைக்குப் பின்னரும் இலங்கை கடற்பரப்பிற்குள் தமிழக மீனவர்கள் வருவார்களேயானால் கடற்படையினர் கைது செய்வார்கள் என்றும் அமைச்சர் ராஜித திட்டவட்டமாக அறிவித்தார்.
தமிழக மீனவர்களுடன் கடந்த 25 ஆம் திகதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இரண்டு தினங்களுக்கு முன்னதாக மன்னார் கடற்பரப்பில் 74 தமிழக மீனவர்கள் 19 வள்ளங்களுடன் கைதாகினர்.
இதேபோன்று கடந்த புதன்கிழமையும் நெடுந்தீவு கடற்பரப்பில் 19 தமிழக மீனவர்கள் அவர்களது வள்ளங்களுடனும் மன்னார் கடற்பரப்பில் 5 தமிழக மீனவர்கள் ஒரு வள்ளத்துடனும் கைதாகினர். எனவே தற்போதுள்ள 98 தமிழக மீனவர்களும் அவர்களது 24 வள்ளங்களுடன் விடுதலை செய்யப்படவுள்ளனர் என அமைச்சர் ராஜித தெரிவித்தார்.