இஸ்ரேல் ராணுவத்திற்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்குமிடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. இரு தரப்பினரும் ராக்கெட் மற்றும் விமான தாக்குதலில் ஈடுபட்டுள்ளதால் ஏராளமானோர் கொல்லப்பட்டு வருகின்றனர். தீவிரவாதிகளின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் விமான தாக்குதலுக்கு பொதுமக்கள் குழந்தைகள் உள்ளிட்ட பலர் பலியாகி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று 750 இடங்களில் இஸ்ரேல் ராணுவம் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கியது. இதில், 74 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 4 வயதான சிறுமி ஒருத்தியும், 5 வயதான சிறுவன் ஒருவனும் அடங்குவர் என கூறப்படுகிறது. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் அப்பாவி பொதுமக்கள் என்றும், ஒரே குடும்பத்தை சேர்ந்த பலர் இறந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
மறுபுறம் இஸ்ரேலின் இந்த கடுமையான தாக்குதலுக்கு போட்டியாக அந்நாட்டின் முக்கிய நகரான டெல் அவிவ் மீது ஏவுகணைகளை வீச ஹமாஸ் இயக்கத்தினர் தயாராகி வருவதாக பாலஸ்தீனிய தரப்பு தெரிவித்துள்ளது.