அமெரிக்காவில், 9 வயது சிறுவனை பட்டினி போட்டு, சித்ரவதை செய்து கொன்ற, 38 வயது பெண்ணுக்கு, விஷ ஊசி மூலம் நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில், 2004ல், தன் பெண் நண்பர் மெர்செல்லாவுடன், 28 வயது நிரம்பிய லிசா கோல்மேன் என்ற பெண் தங்கியிருந்தார். வெளிநாடு சென்ற மெர்செல்லா, தன் 9 வயது மகன் தேவன்டேயை, லிசாவிடம் ஒப்படைத்து சென்றிருந்தார்.அந்தச் சிறுவனை கவனித்துக் கொள்வதாக உறுதியளித்த லிசா, அவனை கடுமையாக சித்ரவதை செய்ததுடன் பட்டினி போட்டு கொடுமைப்படுத்தியதில், அந்தச் சிறுவன் இறந்தான். இந்த படுகொலை தொடர்பாக, 2006ல், லிசாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அவரின் நீதிமன்ற முறையீடுகளை, நீதிபதிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து, நேற்று அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. விஷ ஊசி போடப்பட்ட, 12வது நிமிடத்தில், லிசாவின் உயிர் பிரிந்தது. இதன் மூலம், 1976க்கு பிறகு அமெரிக்காவில் விஷ ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 15வது பெண்ணாக லிசா கருதப்படுகிறார்.கடந்த 1976 முதல், இப்போது வரை, 1,400 ஆண்களுக்கு விஷ ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இரண்டாவது பெண்ணாகவும், ஒன்பதாவது நபராகவும் லிசா விளங்குகிறார்.
0