பெண்கள் ஜீன்ஸ் அணிவது நமது கலாச்சாரத்திற்கு சரியானது அல்ல என்று பெண்கள் ஆடை அணிவது குறித்து கேரளாவில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்று பிரபல பாடகர் ஜேசுதாஸ் பேசுகையில் குறிப்பிட்டார். இந்த பேச்சு கடும் விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது . மேலும் அவரது பேச்சுக்கு மகளிர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு விழாவில் பாடகர் ஜேசுதாஸ் பங்கேற்று பேசுகையில், பெண்கள் ஜீன்ஸ் அணிவது சரியல்ல. பொதுவாக பிறர் மனதை பாதிக்கும் வகையில் பெண்கள் ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும். பெண்கள் உயர்ந்த மதிப்பும், அன்பும் கொண்டவர்களாக இருக்கும் நமது கலாச்சாரத்தில் டிரஸ் கோடிங் முக்கியமானது. இந்திய கலாச்சாரத்திற்கு எதிராக எதுவும் இருக்க கூடாது. இவ்வாறு பாடகர் ஜேசுதாஸ் பேசினார்.
இவரது பேச்சு பெண்களை அவமதிப்பதாக மகிளா காங்கிரசை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இசைத்துறையில் அரும் பங்காற்றிய ஒரு கலைஞரிடம் இருந்து இது போன்று கருத்து வரும் என நினைத்து கூட பார்க்க முடியவில்லை. இது துரதிருஷ்ட வசமானது என மகளிர் சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர்.