அணு ஆராய்ச்சி நிறுத்தம் தொடர்பான உடன்படிக்கைக்கு முன்னதாக, தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை உடனடியாக முற்றிலும் நீக்க வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியிருக்கிறது.
ஈரானின் அணு ஆராய்ச்சியானது ஆயுதத் தயாரிப்புக்கு உதவும் வகையில் உள்ளது என்று அந்நாடு மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடை விதித்துள்ளன.
இந்நிலையில், பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும் என்று ஈரான் கோரி வருகிறது. இது தொடர்பாக பல்வேறு நிலைகளில் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஈரானின் அணு சக்தி ஆராய்ச்சிகள் குறித்த உடன்படிக்கையை நவம்பர் மாதம் 24-ஆம் தேதிக்குள் கையெழுத்திட வேண்டுமென பி-5+1 என்று அறியப்படும் நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
அமெரிக்கா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ரஷியா மற்றும் ஜெர்மனி ஆகிய ஆறு நாடுகள் பி-5+1 நாடுகள் என்று அறியப்படுகின்றன.
இந்நிலையில், குறிப்பிட்ட நாளுக்குள் உடன்படிக்கை ஏற்பட வாய்ப்பில்லை என்று ஈரானின் மூத்த தலைவர் ஒருவர் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.