நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 219 பள்ளி மாணவிகளும் இஸ்லாம் மத மாற்றம் செய்யப்பட்டு, அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுவிட்டதாக அந்த அமைப்பின் தலைவர் அபுபக்கர் ஷேகாவு கூறியுள்ளார்.
மாணவிகளை விடுவிப்பதற்காக தங்களுடன் நைஜீரிய அரசு உடன்படிக்கை மேற்கொண்டுள்ளதாக கூறியுள்ளதை அவர் மறுத்துள்ளார்.
அந்த நாட்டின் சிபோக் நகரிலிருந்து, 219 பள்ளி மாணவிகளை போகோ ஹராம் பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் மாதம் கடத்திச் சென்றனர்.
இது, உலகம் முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. அந்த மாணவிகளை மீட்க வலியுறுத்தி பல்வேறு நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இந்நிலையில், போகோ ஹராம் அமைப்புடன் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக நைஜீரிய ராணுவம் கடந்த அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி தெரிவித்தது.
மேலும், கடத்தப்பட்ட மாணவிகளை விடுவிப்பதற்கு அந்த அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளதாக அதிபர் குட்லக் ஜோனாதனின் உதவியாளர் தெரிவித்தார்.
எனினும், இந்த அறிவிப்புகளுக்குப் பிறகும் போகோ ஹராம் பயங்கரவாதிகள் தொடர்ந்து கடத்தல், தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தனர்.