ஈரான் அணு ஆராய்ச்சி நிறுத்தம் தொடர்பான உடன்படிக்கை குறித்து அந்நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
ஒமான் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவேத் ஜரீஃப், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி கலந்து கொண்டனர். ஈரானின் அணு சக்தி ஆராய்ச்சிகள் குறித்த உடன்படிக்கையை நவம்பர் மாதம் 24-ஆம் தேதிக்குள் கையெழுத்திட வேண்டுமென வல்லரசு நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை உடனடியாக முற்றிலும் நீக்க வேண்டும் என்று ஈரான் கோரியுள்ளது.
இந்நிலையில், இடைக்கால அளவில் ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சியெடுத்து வருகிறது. ஒமானில் நடைபெறும் பேச்சுவார்த்தையின்போது, அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் யூசப் பின் அலாவி பின் அப்துல்லா, ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுக் கொள்கைத் துறையின் முன்னாள் தலைவர் கேதரின் ஆஷ்டன் ஆகியோர் உடனிருந்தனர்.