தென் கொரியாவில், பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான வழக்கில், படகின் கேப்டன், லீ ஜன்சியோகுக்கு, 36 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு கோர்ட்
தீர்ப்பளித்துள்ளது. தென் கொரியாவில், ஏப்ரலில், பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற பயணிகள் படகு, கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில், 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாயினர். இதில், உயிர் தப்பிய கேப்டன் லீ ஜன்சியோக் மற்றும் அவரின் உதவியாளர்கள் மூவர் மீது கொலை குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட், ஜன்சியோகுக்கு, 36 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அவருடன் பணியாற்றிய மற்ற மூன்று அதிகாரிகளுக்கு, 15 முதல் 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில், ‘ஜன்சியோக் வேண்டுமென்றே கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படவில்லை. ஆனால், அவர் தன் கடமையிலிருந்து தவறியுள்ளார். அவர் சரியாக செயல்பட்டிருந்தால், நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகாமல் தடுத்திருக்கலாம். எனினும், அவர் மீதான கொலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், அவருக்கு தூக்கு தண்டனை விதிக்க முடியாது’ என்றனர்.
விபத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோர், இந்த தீர்ப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மரண தண்டனை வழங்கினால் மட்டுமே தங்களுக்கு சரியான நியாயம் கிடைக்கும் எனவும் கூறினர்.