ஜப்பானில் முன்கூட்டியே தேர்தல் நடத்த பிரதமர் ஷின்ஷோ அபே முடிவு செய்துள்ளார்.
ஜப்பானில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் பிரதமர் ஷின்ஷோ அபே அமோகமாக வெற்றி பெற்றார். தற்போது அவரது தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது. இந்த ஆட்சி வருகிற 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை உள்ளது. ஆனால் அதற்கு முன்னதாக ஆட்சியை கலைத்து விட்டு தேர்தல் நடத்த அபே முடிவு செய்துள்ளார். அதாவது ஜப்பான் பாராளுமன்ற தேர்தலை வருகிற டிசம்பர் மாதமே நடத்துகிறார். அதற்கான அறிவிப்பை வருகிற 18ம் தேதி அதிகாரபூர்வமாக அவர் வெளியிடுகிறார். தற்போது எதிர்க்கட்சிகள் பலவீனமான நிலையில் உள்ளது. அதை பயன்படுத்தி அடுத்த தேர்தலை உடனடியாக நடத்த அவர் விரும்புகிறார். ஏனெனில் தற்போது ஜப்பான் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் அபாயத்தில் உள்ளது. அதனை சமாளிக்க நுகர்வோர் வரி 8 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. எனினும் தேர்தலை மனதில் கொண்டு அந்த முடிவை தற்காலிகமாக அவர் நிறுத்தி வைத்துள்ளார். ஜப்பானில் தற்காப்புக்காக மட்டுமே ராணுவம் உள்ளது. அதை படையெடுப்புக்கு தயார்படுத்தும் வகையில் விஸ்தரிக்கவும் பிரதமர் அபே திட்டமிட்டுள்ளார். அதை அமல்படுத்தும் முன்பே தேர்தலை நடத்த அவர் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.