ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா படைகள் கடந்த 2001–ம் ஆண்டு முதல் முகாமிட்டு தலிபான்கள், மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர். அவர்கள் இந்த ஆண்டு இறுதியில் அதாவது டிசம்பருக்குள் வாபஸ் பெறப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில் 9,800 ராணுவ வீரர்கள் மட்டும் அங்கு தங்கியிருந்து ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு அல்கொய்தா உள்ளிட்ட தீவிரவாதிகளை அழிக்க போர் பயிற்சி அளிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த மே மாதம் அறிவித்து இருந்தார்.
ஆனால், அமெரிக்க படைகள் மேலும் ஒரு ஆண்டு அதாவது 2015–ம் அண்டு வரை நீடிக்கிறது. இதற்கான ரகசிய உத்தரவை அதிபர் ஒபாமா பிறப்பித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் மற்றும் பல தீவிரவாத இயக்கங்களின் அச்சுறுத்தல் உள்ளது. எனவே, அங்கு போரை தொடர்ந்து நடத்தி தீவிரவாதிகளின் கொட்டத்தை அடக்க வேண்டும் என பென்டகன் வற்புறுத்தியுள்ளது.
எனவே, அதை ஏற்று அதிபர் ஒபாமா அங்கு அமெரிக்க படைகள் மேலும் ஒரு ஆண்டு நீடிக்க ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் பெருகி வரும் நிலையில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் மேலும் தங்கியிருக்க புதிய அதிபர் அஷ்ரப் கானி ஒப்புதல் அளித்துள்ளார்.
அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு நேரடியாக தலிபான் தீவிரவாதிகள் ஆதரவு அளிக்கின்றனர். அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ளனர். எனவே, அமெரிக்கர்களின் பாதுகாப்பை கருதி ஒபாமா இந்த முடிவு எடுத்துள்ளார்.
ஒபாமாவின் உத்தரவுபடி ஆப்கானிஸ்தானில் போர் விமானங்களின் குண்டு வீச்சு, ஆளில்லா விமானங்களின் ஏவுகணை தாக்குதல் போன்றவை நடைபெறும்.