பயங்கர உயிர்க்கொல்லி நோயான ‘எபோலா’வுக்கு, மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள கிளாக்சோ ஸ்மித்கிளின் நிறுவனம், ஓரளவிற்கு வெற்றி கண்டுள்ளது. அந்த நிறுவனம் கண்டுபிடித்துள்ள மருந்து, நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
அந்த புதிய மருந்து, 20 பேருக்கு வழங்கப்பட்டதில், அவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி பெற்றுள்ள போதிலும், இன்னமும், 48 வாரங்கள் அந்த மருந்து பல கட்ட சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதன்பின் தான், அதன் முழுமையான செயல்பாடு குறித்து, தெளிவான முடிவுக்கு வர முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.செலவு அதிகம் பிடிக்கும் இந்த சோதனையில், 18 வயது முதல், 50 வயது வரையுள்ளவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
அவர்களில் பாதி பேருக்கு, குறைந்த அளவிலான மருந்தும், பிறருக்கு, அதிக அளவிலான மருந்தும் வழங்கப்பட்டது. நோய் எதிர்ப்பு சக்திஅதிக அளவிலான மருந்து வழங்கப்பட்டவர்களுக்கு, சிறப்பான முறையில் நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளதாக, மருத்துவ ஆய்வு நுால் ஒன்று தெரிவிக்கிறது.எபோலா நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில், ஜான்சன் அண்ட் ஜான்சன், மெர்க் போன்ற நிறுவனங்களும் இறங்கியுள்ளன.