ஆப்கானிஸ்தானில் நிறுத்தப்பட்டுள்ள சர்வதேசப் படை அதிகாரப்பூர்வமாக வெளியேறும் நடவடிக்கை திங்கள்கிழமை தொடங்கியது.
நேட்டோ சர்வதேச பாதுகாப்புப் படையின் கொடியை முறைப்படி இறக்கியதோடு, விடைபெறும் நடவடிக்கை தொடங்கியது.
இதைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளின் தலைவராக செயல்பட்டு வந்த அமெரிக்க ராணுவ ஜெனரல் ஜான் கேம்ப்பெல் கூறியது:
சர்வதேசப் படையின் செயல்பாடுகள் முறைப்படி முடிவுக்கு வருகிறது. இனி ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கு உதவும் விதமாக, பயிற்சி அளிப்பில் சர்வதேசப் படையினர் ஈடுபடுவர்.
கடந்த ஆண்டு முதல் தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் ஆப்கன் படையினர் முன்னிலை வகித்து வருகின்றனர்.
ஆப்கன் பாதுகாப்புப் படையினர் திறமைசாலிகள். தலைமையில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் அவர்கள் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும். அந்த மாற்றங்களை அவர்கள் செய்யத் தொடங்கியுள்ளனர்.
புதிய அதிபர் பதவியேற்ற பின்னர், ஆப்கன் வீரர்களின் செயல்பாட்டில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று ஜெனரல் ஜான் கேம்ப்பெல் கூறினார்.
ஆப்கானிஸ்தானில் வரும் ஜனவரி 1-ஆம் தேதியளவில், 13,000 சர்வதேசப் படையினர் இருப்பர். இதில் அதிகபட்சமாக 9,800 அமெரிக்க ராணுவ வீரர்கள் இடம்பெறுவர்.
நேட்டோ படையினர் எண்ணிக்கை கணிசமாகக் குறைவதால், அதனை ஈடு செய்ய கூடுதலாக அமெரிக்க 1,000 வீரர்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
2016-ஆம் ஆண்டு முற்றிலுமாக அமெரிக்க வீரர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவர்.