தமக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பும் வாகனமும் பறிக்கப்பட்டு விட்டதாக மேல் மாகாணசபையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக நேற்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பினை நடத்தி திரும்பிய போது இவ்வாறு பாதுகாப்பு பறிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வீட்டில் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் எனவும் அவர்கள் இருவரும் மீள அழைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமக்கு வழங்கப்பட்டிருந்த வாகனத்தையும் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம் காலை தமது தாயாருக்கு வழங்கப்பட்டிருந்த ஜனாதிபதி ஆலோசகர் பதவி பறிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஹிருனிகா பிரேமசந்திர முன்னாள் ஜனாதிபதி ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.
தமக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ வீட்டையும் ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
பொது வேட்பாளர் மைத்திரிபாலவின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படப் போவதாகவும் எவராலும் அதனை தடுத்து நிறுத்த முடியாது எனவும் ஹிருனிகா தெரிவித்துள்ளார்.