பாகிஸ்தானில் பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளியில் புகுந்து 134 குழந்தைகளை தலிபான் தீவிரவாதிகள் ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்றனர். அதை தொடர்ந்து தீவிரவாதிகள் மீதான பிடியை பாகிஸ்தான் அரசும், ராணுவமும் இறுக்கத்தொடங்கியுள்ளது.
சிறையில் இருக்கும் தீவிரவாதிகளின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தீவிரவாதிகளை கூண்டோடு அழிக்கவும் திட்டமிட்டுள்ளது. அதன் நடவடிக்கையாக கடந்த 2 நாட்களாக தீவிரவாதிகளின் இருப்பிடங்கள் மீது குண்டு வீசப்பட்டன. அதில் 89 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் அரசின் இந்த நடவடிக்கை தலிபான் தீவிரவாதிகளுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ வீரர்களின் குழந்தைகளை தொடர்ந்து அரசியல்வாதிகளின் குழந்தைகளையும் கொலை செய்வோம் என மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து தலிபான் தீவிரவாதிகள் நவாஸ் செரீப் அரசுக்கு கடிதம் மூலம் பகிரங்கமாக எச்சரிக்கை செய்துள்ளனர். அந்த கடிதத்தில், ‘‘தீவிரவாதிகள் மீதான தூக்கு தண்டனையை நிறைவேற்றக்கூடாது’’
மீறினால் பாகிஸ்தான் அரசியல்வாதிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளின் குழந்தைகளை கொலை செய்வோம். குறிப்பாக பிரதமர் நவாஸ் செரீப் குடும்பத்து குழந்தைகளை கொல்வோம் என கூறியுள்ளனர். இக்கடிதத்தை தலிபான் தீவிரவாதிகளின் தலைவர் முல்லா பஷ்ஷல்லா எழுதியது போன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதில், ராணுவ பள்ளி குழந்தைகளை கொலை செய்ததை தீவிரவாதிகள் நியாயப்படுத்தியுள்ளனர். ராணுவத்திலும், அதன் பள்ளியிலும் மதத்துக்கு எதிரான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அங்கு மதகோட்பாடுடன் கல்வி கற்றுத்தரப்படவில்லை. எனவே, அவர்களது பெற்றோரை போன்று (ராணுவ வீரர்களை போன்று) அந்த குழந்தைகளும் வளருவார்கள். எனவே, அவர்களை கொலை செய்தோம். இது குறித்து திறந்தவெளியில் விவாதிக்க மததலைவர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.
தீவிரவாதிகளை தூக்கிலிட்டால் அரசியல்வாதிகள் மற்றும் ராணுவ ஜெனரல்களின் வீடுகள் அஞ்சலி செலுத்தும் கூடங்களாக மாறிவிடும். அவர்களின் குழந்தைகளை கொன்று பழிதீர்ப்போம் என எச்சரித்துள்ளனர்.
இதற்கிடையே பாகிஸ்தானில் 2009–ம் ஆண்டு ராவல் பிண்டியில் உள்ள ராணுவ தலைமையிடத்தை தாக்கிய அகீல் என்கிற டாக்டர் உஸ்மின், 2003–ம் ஆண்டு முன்னாள் ராணுவ தளபதி முஷரப்பை தாக்கிய அரிஷத் முகமது ஆகிய 2 தீவிரவாதிகள் தூக்கில் போடப்பட்டனர்.
தீவிரவாதிகள் மீதான ராணுவ தாக்குதலும் தீவிரப்படுத்தப்பட்டது. நேற்று நடந்த குண்டு வீச்சில் 67 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். கடந்த 2 நாட்கள் நடத்தப்பட்ட குண்டு வீச்சு தாக்குதலில் 124 தீவிரவாதிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.