கடந்த ஞாயிறன்று, இந்தோனேஷியாவில் ஏர் ஆசியா விமானம் விபத்துக்குள்ளாகி, 162 பேரை பலிவாங்கிய நிலையில், இந்த வார ஞாயிறான நேற்று, மீண்டும் அதே நாட்டில், அதே நிறுவனத்தின் விமானம், பயங்கர விபத்தில் இருந்து நுாலிழையில், 120 பயணிகளுடன் தப்பியது.
இந்தோனேஷியா வின் சுரபயா நகரில், ஜூவாண்டா விமான நிலையத்தில் இருந்து, பாண்டுங் நோக்கி, ஏர் ஆசியா விமானம் ஒன்று புறப்பட்டது. அதில், 120 பயணிகள் இருந்தனர். ஓடுதளத்தில் இருந்து விமானம் புறப்படத் துவங்கிய சில நொடிகளில், திடீரென்று பயங்கர வெடி சத்தம் கேட்டது. இதையடுத்து, விமானம், வேகமாக பின்னோக்கி நகர்ந்தது. இதனால், பயணிகள் பீதியில் அலறினர்.
உடனே விமானி, ”விமான இன்ஜின் செயலிழந்துள்ளதால், விமானம் பறக்காது,” என்று கூறி, பயணிகளை பத்திரமாக வெளியேற்றினார். தப்பித்தோம், பிழைத்தோம் என, பெருமூச்சு விட்டபடி வெளியேறிய பயணிகள், விமான நிலைய வரவேற்பறையில் தங்க வைக்கப்பட்டனர்.
சிறிது நேரத்தில் கோளாறு சரி செய்யப்பட்டு, விமானம் புறப்பட தயாராகி விடும் என்று ஏர் ஆசியா தெரிவித்தது. ஆனால், நுாலிழையில் உயிர் தப்பிய அதிர்ச்சியில் இருந்து மீளாத, 90 சதவீத பயணிகள், இலவசமாக அழைத்து சென்றாலும், அந்த விமானம் வேண்டாம் என, மறுத்து விட்டனர். இதனால், அவர்களுக்கு, பணம் திரும்ப தரப்பட்டது.
இதனிடையே, ஞாயிற்றுக்கிழமையில், சுரபயா – சிங்கப்பூர் விமான சேவை மேற்கொள்ள, ஏர் ஆசியா நிறுவனத்திற்கு உரிமம் வழங்கவில்லை என, இந்தோனேஷியா தெரிவித்துள்ளது. விதிகளை மீறிச் சென்று, 162 பேரின் விதியை முடித்த ஏர் ஆசியா மீது விசாரணை நடத்தவும் உத்தரவிட்டு உள்ளது.ஆனால், சிங்கப்பூர் அரசோ, ஏர் ஆசியா விமான போக்குவரத்திற்கு, தான் அனுமதி அளித்ததாக கூறியுள்ளது.