லிபியாவில் இருந்து 213 அகதிகளை ஏற்றிச் சென்ற இரு படகுகள், மோசமான வானிலை காரணமாக, மத்திய தரைக்கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாயின. இதில், ஒன்பது பேர் மட்டும் உயிர் பிழைக்க, மற்றவர்களின் கதி என்னவாயிற்று என்று தெரியவில்லை.
இதுகுறித்து, சர்வதேச குடியேற்ற கூட்டமைப்பு அதிகாரி பிளாவியே டி ஜியாகேமோ கூறியதாவது: லிபியாவில் இருந்து இரண்டு ரப்பர் படகுகளில், 213 பேர், மத்திய தரைக்கடல் வழியாக, இத்தாலிக்கு சொந்தமான லாம்பெடுசா தீவிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராமல் வீசிய கடுமையான சூறாவளியில் சிக்கி, இரண்டு படகுகளும் கடலில் மூழ்கின. இதில், நான்கு நாட்களாக உயிரை கையில் பிடித்தபடி, நடுக்கடலில் தத்தளித்த ஒன்பது பேர், ஒருவழியாக, லாம்பெடுசா தீவில் கரையேறிஉள்ளனர். அவர்கள் பிரெஞ்சு பேசுவதால், ஐவரி கோஸ்ட், செனகல் போன்ற மேற்கு ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என, தெரிகிறது. எஞ்சியவர்கள் கடலில் மூழ்கியிருக்கலாம் என, அஞ்சப்படுகிறது. அவர்களை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார் லிபியாவில், கடுமையான உள்நாட்டு சண்டை காரணமாக, பலர், சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்கின்றனர். ஓரளவு பணமும், துணிவும் உள்ளோர், கள்ளத் தோணி மூலம், அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.