இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது போர்க் குற்றத்தில் ஈடுபட்டோரை சட்டத்தின் முன்னிறுத்த அந்த நாடு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் உற்று கவனித்து வருவதாக அவரது செய்தித் தொடர்பாளர் செவ்வாய்கிழமை கூறினார்.
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான புதிய செயல்திட்டத்தை அந்த நாட்டு அரசு உருவாக்குவது குறித்து பான் கி-மூன் அறிந்துள்ளார் எனவும், இந்த விவகாரத்தில் ஏற்படும் முன்னேற்றங்களை அவர் அக்கறையுடன் கவனித்து வருவதாகவும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இலங்கையில் மனித உரிமையை நிலைநாட்ட மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், போர்க் குற்றத்தில் ஈடுபட்டோருக்கு தண்டனை பெற்றுத் தருதல், தமிழர் பகுதிகளில் நல்லிணக்கப் பணிகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றின் அவசியம் குறித்து கடந்த வெள்ளிக்கிழமை தன்னைச் சந்தித்த இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரவிடம் பான் கி-மூன் வலியுறுத்தியதையும் அவரது செய்தித் தொடர்பாளர் சுட்டிக் காட்டினார்.