இலங்கையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்து வரும் வரலாறு காணாத கனமழையால் கொழும்பு உள்பட 25 மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் கடுமையான நிலச்சரிவினால் பலர் மண்ணில் புதையுண்டுள்ளனர். மிக மோசமாக பாதிக்கப்பட்ட காலே மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கி புதையுண்ட 13 பேரின் உடல்களை நேற்று முன்தினம் இலங்கை ராணுவத்தினர் மீட்டனர்.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 82 பேர் உயிர் இழந்துள்ளதாகவும், ஆரன்யாகே பகுதியில் இருந்து 43 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. 3 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்க இடமின்றி சிக்கி தவித்து வருகின்றனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்டு வருகின்றனர். இந்தியா அனுப்பிய விமானப்படை விமானம் மற்றும் 2 கடற்படை கப்பல்கள் நேற்றுமுன்தினம் முதல் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.
ஐக்கிய நாடுகள் அமைப்பு பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உறுதுணையாகவும், உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான ஐ.நா தூதர் உனா மெக்கவுலி இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவை சந்தித்து அவசர தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.