ஜெயலலிதாவின் மறைவுக்கு நாடு முழுவதும் ஒரு நாள் அரசுமுறை துக்கத்தை மத்திய அரசு கடைப்பிடித்தது. இதையொட்டி தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்தன.
தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா மறைவால் தமிழகத்தில் ஒரு வாரம் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதே போன்று நாடு முழுவதும் ஒரு நாள் அரசுமுறை துக்கம் கடைப்பிடிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையில், ‘‘தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தை இந்திய அரசு ஆழ்ந்த துக்கத்துடன் அறிவிக்கிறது. இதையொட்டி, நாடு முழுவதும் இன்று (நேற்று) ஒரு நாள் அரசுமுறை துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. எந்த அரசு நிகழ்ச்சியும் நடைபெறாது’’ என குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், ‘‘மறைந்த தலைவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைநகரங்களிலும், தலைநகர் டெல்லியிலும், தமிழ்நாடு முழுவதும் தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும்’’ என கூறப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று நாடு முழுவதும் ஒரு நாள் துக்கம் கடைப்பிடிக்கப்பட்டது. டெல்லியிலும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைநகரங்களிலும், தமிழ்நாடு முழுவதும் தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.
எந்தவொரு அரசு நிகழ்ச்சியும் நடத்தப்படவில்லை.
இதே போன்று முழு அரசு மரியாதையுடன் ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படியே முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது.