மெக்ஸிகோ பட்டாசு சந்தையில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் சிக்கி 27 பேர் பலியாகினர்; பலர் படுகாயமடைந்தனர்.
மெக்ஸிகோவிலிருந்து 45 கி.மீ., தொலைவில் அமைந்த பட்டாசு சந்தையில், கிறிஸ்துமஸ் நெருங்குவதையொட்டி விற்பனை சூடு பிடித்திருந்தது. அச்சமயத்தில் திடீரென அங்கு நிகழ்ந்த வெடி விபத்தால் பட்டாசுகள் வெடித்து சிதறின. இதனால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளிக்கின்றது. இவ்வெடி விபத்தில் சிக்கி குறைந்தது 27 பேர் வரை பலியாகி இருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 70 பேர் படுகாயமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் விரைந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக, அப்பகுதி சாலை வழியை பொதுமக்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்விபத்தால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மெக்ஸிகோ அதிபர் என்ரிக் பினா நெய்டோ தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். கடந்த 2005ம் ஆண்டு செப்., மாதம் இதே பட்டாசு சந்தையில் வெடி விபத்து நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.