அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மையான தேர்தல் சபை வாக்குகளை பெற்றதைத் தொடர்ந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் (வயது 70) அதிகாரப்பூர்வமாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்.
இருப்பினும் பாப்புலர் ஓட்டு என்று அழைக்கப்படுகிற மக்கள் ஓட்டுகளில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன், டிரம்பை விட கூடுதல் வாக்குகள் பெற்று முன்னணி பெற்றிருக்கிறார்.
இறுதி நிலவரப்படி, ஹிலாரி கிளிண்டன் 6 கோடியே 58 லட்சத்து 44 ஆயிரத்து 610 ஓட்டுகளைப் பெற்றார். இது 48.2 சதவீத வாக்குகள் ஆகும். அவருக்கு அடுத்த படியாக வந்துள்ள டொனால்டு டிரம்ப் 6 கோடியே 29 லட்சத்து 79 ஆயிரத்து 636 ஓட்டுகளைப் பெற்றார். இது 46.6 சதவீத ஓட்டுகள் ஆகும்.
ஹிலாரி கூடுதலாகப் பெற்றுள்ள வாக்குகள் 28 லட்சத்து 64 ஆயிரத்து 974 ஆகும்.
லிபர்டேரியன் கட்சி வேட்பாளர் கேரி ஜான்சன், கிரீன் கட்சி வேட்பாளர் ஜில் ஸ்டீன் உள்ளிட்ட உதிரிக்கட்சி வேட்பாளர்கள் 78 லட்சத்து 4 ஆயிரத்து 213 ஓட்டுகளை பெற்றனர். இது 5.7 சதவீத ஓட்டுகள் ஆகும்.
மக்கள் வாக்குகளை அமோகமாக பெற்றுள்ள போதும், தேர்தல் சபை வாக்குகளை பெறுவதில் பின்னடைவை சந்தித்ததால் ஹிலாரி கிளிண்டன் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார், டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.