இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடி வந்த விடுதலைப்புலிகள் அமைப்பை அமெரிக்கா கடந்த 1997-ம் ஆண்டு தடை செய்தது.
அந்த அமைப்பை பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் சேர்த்துள்ள அமெரிக்கா, விடுதலைப்புலிகளுக்கு எதிரான
நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் அங்கு வாழும் தமிழர்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே இந்த தடையை நீக்க வேண்டும் என ‘ஒபாமாவுக்கான தமிழர்கள்’ என்ற தமிழ் அமைப்பு ஜனாதிபதி ஒபாமாவுக்கு கோரிக்கை விடுத்து உள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளதால் அமெரிக்காவில் வாழும் தமிழர்களுக்கு பல்வேறு துன்பங்கள் ஏற்படுகின்றன. இங்குள்ள தமிழர்கள் வெளிநாடு செல்லும் போதும், அங்கிருந்து அமெரிக்காவுக்கு திரும்பும் போதும் விசாரணை என்ற பெயரில் பலமணி நேரம் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
இலங்கையில் இறுதிகட்ட போர் நடந்த 2009-ம் ஆண்டுக்கு பிறகு விடுதலைப்புலிகள் அமைப்பு எந்த வித நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் செயலிழந்து உள்ளது. எனவே இந்த அமைப்பை தொடர்ந்து பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் வைப்பதற்கு
எந்த காரணமும் இல்லை.
இது (விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்தது) இலங்கையில் அப்பாவி தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு போருக்கு உதவுவதற்காக முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் நிர்வாகம் எடுத்த தவறான நடவடிக்கை ஆகும்.
இந்த பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகள் அமைப்பை நீக்குவதன் மூலம் இந்த கிறிஸ்துமஸ் மற்றும் பண்டிகை காலத்தில் சிறிய நிவாரணத்தை இங்குள்ள தமிழர்களுக்கு ஒபாமாவால் வழங்க முடியும்.
எனவே விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் இருந்து நீக்கி, அதன் மீதான தடையை விலக்கிக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.