ஜெர்மனியைச் சேர்ந்த பி.எம்.டபிள்யூ. நிறுவனம் சீனாவில் விற்பனைசெய்த 1.93 லட்சம் கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. காற்றுப்பைகளில் ஏற்பட்ட கோளாறை சரி செய்து தருவதற்காக அந்த நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.
இதுகுறித்து சீன அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹுவா தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2005-ஆம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி முதல் 2011-ஆம் ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி வரையிலான கால அளவில் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் 1,68,861 கார்களை சீனா இறக்குமதி செய்தது. அதேபோன்று, 2005-ஆம் ஆண்டு ஜூலை 12 முதல் 2011 டிசம்பர் 31 வரையில் செடான் வகையைச் சேர்ந்த 24,750 பி.எம்.டபிள்யூ. கார்களும் இறக்குமதியாகின.
இந்த கார்களில் முன்பக்க இருக்கையில் உள்ள ஓட்டுநர் மற்றும் பயணிகளின் காற்றுப் பைகளில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.இதையடுத்து, பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்த குறைபாட்டை சரி செய்து தர உறுதி அளித்துள்ளது. இதற்காக, அந்த நிறுவனம் 1.93 லட்சம் கார்களை திரும்பப் பெற உள்ளது. பழுதான பாகங்களை இலவசமாக மாற்றித் தர அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
0