லத்தீன் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில் கடந்த ஆண்டு மவுரிசியோ மாக்ரி அதிபர் பதவிக்கு வந்தார். 12 ஆண்டு கால இடதுசாரிகள் ஆட்சிக்கு முடிவு கட்டிவிட்டு அவர் பதவி ஏற்றார். அவரது மந்திரிசபையில் அல்போன்சோ பிராட் கே, நிதி மந்திரியாக இருந்து வந்தார். இவர் அங்கு பல பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் கொண்டு வருவதற்கு காரணமாக இருந்தார். ஆனால் அவை எதிர்விளைவுகளை ஏற்படுத்தி விட்டன.
அந்த நாட்டின் நாணயம் பெசோ, தனது மதிப்பில் மூன்றில் ஒரு பங்கை இழந்தது. இதன் காரணமாக அங்கு ஆண்டுப்பணவீக்க விகிதம் 40 சதவீதத்துக்கு மேல் எகிறியது. அது மட்டுமின்றி, பொது போக்குவரத்து, மின்சாரம், கியாஸ் ஆகியவற்றின் மீதான மானியத்தை அவர் நீக்க வழிவகுத்தார். இதனால் கொந்தளித்துப்போன மக்கள் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தினர். 6 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன.
இதன் காரணமாக அதிருப்தி அடைந்த அதிபர் மவுரிசோ மாக்ரி, நிதி மந்திரியை பதவி விலகுமாறு உத்தரவிட்டார். இதையடுத்து நிதி மந்திரி அல்போன்சோ பிராம் கே, நேற்று பதவி விலகினார். அங்கு புதிய நிதி மந்திரியாக பொருளாதார மேதை நிக்கோலஸ் துஜோவ்னே நியமிக்கப்படுவார் என தகவல்கள் கூறுகின்றன.