இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையில் 26 ஆண்டுகளுக்கு மேலாக மோதல் நடைபெற்றது. கடந்த 2009-ம் ஆண்டு இறுதிக்கட்ட போர் நடந்தது. அப்போது 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமான தமிழ் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர். இதையடுத்து கடந்த 2002 முதல் 2011 வரையில் இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்து வந்தன.
இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் கூட்டத் தொடரில் இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்த விசாரணை அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் ஸேய்ட் ராட் அல் உசேன் சமர்ப்பித்தார்.
அந்த அறிக்கையில், ‘இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக் கட்ட போரின்போதும், போர் முடிந்த பிறகும் பல வகைகளில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. 2009 முதல் 2011-ம் ஆண்டு வரை அங்கு மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன. இதில் புலிகள், ராணுவம் என இருதரப்பினருமே மனித உரிமைகளை மீறியுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்த பன்னாட்டு நீதிபதிகள் கொண்ட சர்வதேச நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இந்த பரிந்துரையை ராஜபக்சே தலைமையிலான முந்தையை இலங்கை அரசும், தற்போதைய அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா தலைமையில் நடந்துவரும் அரசு நிர்வாகமும் மறுத்து வருகிறது. பன்னாட்டு நீதிபதிகள் அடங்கிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என கடந்த அதிபர் தேர்தலில் சிறிசேனாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
போர்க் குற்றங்கள் தொடர்பாக உள்நாட்டிலேயே சுதந்திரமான அமைப்பு விசாரணை நடத்தும் என்று இலங்கை அரசு தொடர்ந்து கூறி வருகிறது. அதற்காக உலக நாடுகளிடம் ஆதரவை திரட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், போர்க்குற்ற விசாரணையை எப்படி நடத்தலாம்? என்று பரிந்துரைப்பதற்காக பிரதமர் ரனில் விக்ரமசிங்கே ஒரு ஆலோசனை குழுவை நியமித்தார்.
உள்நாட்டு நீதியமைப்பின்மீது நம்பகத்தன்மையின்மை மற்றும் போர்க் குற்ற விசாரணை தொடர்பான முன் அனுபவமில்லாமையை சுட்டிக்காட்டிய இந்த ஆலோசனை குழு, இந்த விசாரணையில் வெளிநாட்டு நிதிபதிகளையும், வழக்கறிஞர்களையும் ஈடுபடுத்த வேண்டும் என தற்போது கருத்து தெரிவித்துள்ளது.