மலேசியாவில் பஹாங் மாநிலத்தில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டை ஒன்றில், மனித கடத்தலில் சிக்கிய 17 தாய்லாந்து பெண்கள் ஒரு பொழுதுபோக்கு மையத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த 17 பெண்களும் உபசரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும், இதில் 21 முதல் 36 வயது பெண்கள் உள்ளதாக மாநில குற்றப்புலனாய்வு துறையின் தலைமை அதிகாரி ஓத்மன் நயன் தெரிவிக்கிறார், மேலும் இந்த தேடுதல் வேட்டையில், அந்த பொழுதுபோக்கு மையத்தின் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இம்மையத்தின் மேலாளராக கருதப்படும் 32 வயதுடைய உள்ளூர் நபர் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த குறிப்பிட்ட தேடுதல் வேட்டை பொழுதுபோக்கு மையங்களின் தொழிலுக்கு தொல்லை கொடுக்கும் முகமாக நடத்தப்படவில்லை.
மாறாக சமூக பிரச்சினையாக உள்ள மனித கடத்தலை தடுக்கும் முகமாக நடத்தப்பட்டதாக பஹாங் மாநில குற்றப்புலனாய்வு துறையின் தலைமை அதிகாரி ஒத்மன் நயன் குறிப்பிட்டு இருக்கிறார்.