“அந்நிய முதலீடு குறித்து வெள்ளையறிக்கை கேட்கும் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளரிக்காய்தான் கொடுப்போம்” என கே.டி.ராஜேந்திரபாலாஜி கிண்டலடித்தார்.
தமிழக முதல்வருடன் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி இன்று விருதுநகருக்கு வந்தார். கட்சித் தொண்டர்கள் அவரை வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றது மிகப்பெரிய வெற்றி. சேலம் மாவட்டத்தில் கால்நடை ஆராய்ச்சி மையம், பசு வளர்ப்பு, இனவிருத்தி, தீவன உற்பத்தி என ஒருங்கிணைந்த மிகப்பெரிய பால் பண்ணை அமைக்கப்படும். லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா உள்ளிட்ட மாகாணங்களில் கால்நடை வளர்ப்பைப் போல தமிழகத்தில் உள்ள ஊட்டி, கொடைக்கானல், சேலம் போன்ற மலைப் பிரதேசங்களில் மிகப்பெரிய பால் பண்ணை அமைக்கப்படும்.
முதல்வரின் இந்த வெளிநாட்டுப் பயணத்தை ஸ்டாலினைத் தவிர சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் என அனைவரும் வரவேற்கிறார்கள். எவ்வளவு முதலீடு கிடைத்துள்ளது என்பது குறித்து வெள்ளையறிக்கை கேட்கும் ஸ்டாலினுக்கு வெள்ளை அறிக்கை மட்டுமல்ல. மஞ்சள் அறிக்கை, பச்சை அறிக்கையும் கொடுப்போம். வெள்ளரிக்காய்தான் கொடுப்போம்.
தமிழை விற்று தமிழர்களை ஏமாற்றி அரசியல் செய்தவர் ஸ்டாலின். தங்களால் செய்ய முடியாததை எடப்பாடி செய்துவிட்டார் என அவருக்குப் பொறாமை உள்ளது. அவரது நாடகம் எடுபடாது. பல தொழிலதிபர்கள் தமிழகத்துக்கு வந்து தொழில் தொடங்குவார்கள். இதன்மூலம் வேலையில்லாத பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டவுடனே தொழில் தொடங்க முடியாது என்பது ஸ்டாலினுக்கே தெரியும். ஆனாலும் அவர் சிறுபிள்ளைத்தனமாக பேசி ஒன்றும் தெரியாதது போல் நாடகமாடுகிறார். நடிகர் சிவாஜியின் ரசிகர் தினகரன். அதனால் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் இணைந்து வளர்த்த அ.தி.மு.க-வை எதிர்க்கிறார். தி.மு.க-விடம் அவர் மறைமுகமாக கூட்டணி வைத்துள்ளார்.
அவரின் உண்மையான ரூபம் தெரிந்துதான் நாஞ்சில் சம்பத் அவரை விட்டுச் சென்றுவிட்டார். புகழேந்தி புலம்பிக் கொண்டிருக்கிறார். தினகரன் தி.மு.க கட்சிக்குச் சென்றுவிடுவார்” எனத் தெரிவித்தார்.