உலகெங்கும் பெருகிவரும் கொரோனா வைரஸ் மீதான அச்சம், ஆஸ்திரேலிய மக்களிடம் மட்டுமின்றி அந்நாட்டில் உள்ள அகதிகளிடையேயும் பரவியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற பல அகதிகள் உடல்நலம் அல்லது
மனநலம் குன்றிய நிலையில் பலவிதமான தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஹமித் எனும் ஈரானிய அகதியும் இவ்வாறு தடுப்பில் உள்ளவர்களில் ஒருவர். நவுருத்தீவில் செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் இருந்த போது, தன்னைத்தானே தீ வைத்துக்கொண்ட நிலையில் அவர் காப்பற்றப்பட்டிருக்கிறார்.
ஏற்கனவே மன ரீதியாக பாதிக்கப்பட்ட ஹமித், இதன் மூலம் உடல்ரீதியாக பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவ தேவையின் அடிப்படையில் ஆஸ்திரேலியாவுக்கு மாற்றப்பட்டார்.
ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னரும் கூட, ஓராண்டுக்கு மேலாக மெல்பேர்ன் தடுப்பு முகாமில் இவர் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ‘ஹமித்’ சமூகத்திற்குள் விடுவிக்கப்பட வேண்டும் எனக் கூறுகிறார் இவரது மருத்துவர்.
“இதுதொடர்பான பரிசீலணைக்கு ஒரு வாரத்திற்கு மேலாகும் என்றனர் அதிகாரிகள். ஆனால் 15 மாதங்கள் கடந்த பின்னரும் ஆஸ்திரேலிய எல்லைப்படை எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை,” என்கிறார் ஹமித்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், ஹமித்தைப் போல தடுப்பில் உள்ள அகதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அகதிகள் நல செயல்பாட்டாளர்கள் முன்வைத்துள்ளனர்.