உலகெங்கும் கொரோனா அச்சம் பெருகிவரும் சூழலில், மியான்மரிலிருந்து படகு வழியாக சென்ற 200க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் மலேசியாவில் தஞ்சமடைந்திருக்கின்றனர். இந்த அகதிகள், மலேசியாவின் லங்காவி (Langkawi) தீவுப்பகுதி அருகே மீட்கப்பட்டுள்ளனர்.
இதில் 152 பேர் ஆண்கள், 45 பேர் பெண்கள், 5 பேர் குழந்தைகள் என 202 அகதிகள் மீட்கப்பட்டுள்ளதாக மலேசிய கடற்படை அதிகாரியான கேப்டன் ஜூலிண்டா ரம்லி தெரிவித்திருக்கிறார். இவர்களை அழைத்துவந்த படகோட்டியும் ஆட்கடத்தல்காரர்களாக சந்தேகிக்கப்படும் 2 பேரும் நடுக்கடலிலேயே தப்பிவிட்டதாக அகதிகள் குறிப்பிட்டிருக்கின்றனர் என கடற்படை அதிகாரி கூறியுள்ளார்.
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அகதிகளை கையாள்வதில் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என கடற்படை அதிகாரி ஜூலிண்டா தெரிவித்திருக்கிறார். அதே சமயம், மலேசிய ஊடகங்கள் 250 அகதிகள் தஞ்சமடைந்துள்ளதாக மாறுப்பட்ட எண்ணிக்கையை குறிப்பிட்டுள்ளது.
ரோஹிங்கியா அகதிகள் இத்தீவில் தஞ்சமடைவது இது முதல்முறையல்ல. கடந்த 2012ம் ஆண்டு சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் இத்தீவில் தஞ்சமடைந்திருக்கின்றனர்.
மியான்மரின் ரக்ஹைன் மாநிலத்தில் ரோஹிங்கியா அகதிகளை குறிவைக்கும் வன்முறை சம்பவங்களை இனச்சுத்தரிகரிப்போடு ஒப்பிட்ட ஐக்கிய நாடுகள் சபை ‘இனச்சுத்திகரிப்பை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதை வெளிப்படுத்தும் பாடப்புத்தகம் இது’ எனக் குறிப்பிட்டிருந்தது.
இன்றைய நிலையில் சுமார் 10 லட்சம் ரோஹிங்கியா அகதிகள் வங்கதேசத்தில் உள்ள அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.
மியான்மரில் உயிர் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் ரோஹிங்கியா அகதிகள் மியான்மர், வங்கதேசத்திலிருந்து படகு வழியாக மலேசியாவில் தஞ்சமடைவது தொடர்கதையாக இருந்து வருகின்றது.