அரச வைத்தியசாலைகளில் கிளினிக் சிகிச்சை மூலம் பெற்றுக்கொள்ளும் மாதம் ஒன்றுக்கு போதுமான மருந்துகள் தம்மிடம் இல்லாத நோயாளர்களுக்கு மருந்துகளை வழங்குவதற்காக இலங்கை தபால் சேவையுடன் கூட்டான வேலைத்திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளதாக பதில் சுகாதார சேவை பணிப்பாளரும் விசேட வைத்தியருமான ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் கட்ட நடவடிக்கையாக நாளை (27) தொடக்கம் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்திற்கு மேலதிகமாக களுத்துறை, குருநாகல் மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் கிளினிக் சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளும் நோயாளர்களுக்கு மருந்துகளை வீடுகளுக்கே சென்று வழங்கும் பணி ஆரம்பமாகவுள்ளது.
இந்த மருந்துகளை நோயாளர்களுக்கு சென்று வழங்குவதாயின் நோயாளர்கள் குடியிருக்கும் இடத்தின் முகவரியும் தொலைப்பேசி இலக்கத்தையும் வழங்குவது அவசியமாகும்.
தமது கிளினிக் சிகிச்சை புத்தகத்துடன் சரியான முகவரியை வழங்கவில்லையாயின் தொலைபேசி மூலம் நீங்கள் மருந்துகளை பெற்றுக்கொள்ளும் வைத்தியசாலைக்கு அழைப்பை ஏற்படுத்தி தகவல்களை பூரணப்படுத்துங்கள்.
அப்பொழுது உங்களது வைத்தியசாலை பணியாளர்கள் உங்களது மருந்து பொதிகளை தயார் செய்து முகவரி, தொலைபேசி இலக்கத்தை குறிப்பிட்டு தபால் அலுவலகங்களில் ஒப்படைப்பதுடன் தபால்களை விநியோகிக்கும் ஊழியர்கள் மூலம் உங்களது வீடுகளுக்கு கொண்டு வந்து ஒப்படைப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
வைத்தியசாலைகளுக்கு தகவலை வழங்கும் போது உங்கள் பிரதேசத்தில் உள்ள குடும்ப சுகாதார சேவை அதிகாரி, கிராம உத்தியோகத்தர்களினதும் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வது பொருத்தமானதாகும்.
இந்த சந்தர்ப்பத்தில் கிளினிக் சிகிச்சை சேவையை முன்னெடுப்பது சுகாதார பணியாளர்கள் மற்றும் தபால் திணைக்களத்தினால் நிறைவேற்றப்படும் செயற்பாடு வரவேற்க்கத்தக்கதாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)