உலகத் தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள சினம்கொள் திரைப்படத்தை யாழ்ப்பாணத்தில் பார்க்க ரசிகர்களுக்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
எதிர்வரும் 21ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சர்வதேச திரைப்பட விழா ஆரம்பிக்கப்பட்டுள்ளது இதன்போது முதல் திரைப்படக் காட்சியாக சினம்கொள் திரைப்படம் வெளியிடப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் காகிலல்ஸ் ரீகல் சினிமா திரையரங்கில் சினம்கொள் படத்தை 21ஆம் திகதி பிற்பகல் 2.30 மணி காட்சியில் ரசிகர்கள் பார்வையிடலாம். சர்வதேச நாடுகளின் திரையரங்குகளில் வெளியான சினம்கொள் திரைப்படத்தை உலகத் தமிழர்கள் வியந்து கொண்டாடியிருந்தனர்.
தடுப்புச் சிறையிலிருந்து மீளும் முன்னாள் விடுதலைப் புலிப் போராளி ஒருவரின் வாழ்க்கை போராட்டத்தை பற்றிய இந்த திரைப்படத்தை தென்னிந்திய திரைக்கலைஞர்கள் பலரும் வெகுவாக பாராட்டி இருந்தனர்.
முழுக்க முழுக்க ஈழத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணத்தில் படப்பிடிப்புக்கள் மெற்கொள்ளப்பட்ட சினம்கொள் திரைப்படத்தை பார்க்க இலங்கை ரசிகர்கள் பலரும் ஆர்வம் தெரிவித்துள்ள நிலையில் திரைப்படத்தை பார்க்க ஒரு அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக படக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.
ஈழ – தென்னிந்திய நடிகர்கள் நடித்துள்ள மிகப் பெரும் ஈழச் சினிமா படைப்பாக கருதப்படும் இத் திரைப்படத்திற்கு இந்திய திரைப்பட திணிக்கை துறை யூ (U) சான்றிதழை வழங்கியிருந்த நிலையில் இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனம் தணிக்கை சான்றிதழை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஈழ விடுதலைப் போராட்டத்தை வலுவாகப் பேசும் சினம்கொள் திரைப்படம், பல்வேறு போராட்டங்கள், நெருக்கடிகளின் மத்தியில் உருவெடுத்துவருகின்ற நிலையில் இத் திரைப்படத்தை இலவசமாக பார்க்கும் சந்தர்பத்தை ரசிகர்கள் தவற விட வேண்டாம் என்றும் படக் குழு கூறுகிறது.