மண்ணாய் கிடந்த மறத்தமிழர் உதிரம்
அண்ணா என்ற அடலேறு வந்தபின்னால்
பொன்னாய் மின்னியது புனலாய் பொங்கியது
சின்னானும் சேவகனும் சீமைத்துரை போலானார்
மதராச மாகாணம் மன்னு தமிழ் நாடானது
சிதறாமல் தமிழரெலாம் சிந்தையிலே ஒன்றேயானார்
வடவாசல் பார்த்து வாழ்ந்திருந்த தமிழனை
வடக்கு வாழ்வதா தெற்கு தேய்கையில் என
முடமான தமிழினத்தின் முதுகு நிமிர்த்தி
அடமான மாகிவிட்ட அவமானம் போக்கியவன் -இன்று
நெடுவாசல் நிகழ்வுகளில் நீர்த்துவிட்ட நிலைகண்டு
சுடுதமிழால் சுட்டிருப்பான் சொரணையற்ற மனிதர்களை
தம்வாழ்வு என்பது தமிழர் வாழ்வேன்றே
நம்பிக்கை கொண்ட நயமான தலைவனவன்
தம்பியர் தம் நிலைமை தானின்று கண்டிருந்தால்
வெம்பி விழுந்திருப்பான் வேதனையில் துடித்திருப்பான்
நாற்காலி சுகத்துக்காய் நாற்காலில் மனிதர்கள்
நாரித்திரிவது கண்டு காரி உமிழ்ந்திருப்பான்
கவிக்கிறுக்கன் முத்துமணி