புதிய பஸ் கட்டண திருத்தத்தை அமுல்படுத்தாத பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பாடசாலை மாணவர் பஸ், வேன் சேவை மற்றும் முச்சக்கர வண்டி சேவை ஆகியவற்றின் கட்டணங்களை ஒழுங்குப்படுத்தும் வகையில் சட்டம் உருவாக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிருண்டா தெரிவித்தார்.
பொது போக்குவரத்து சேவை கட்டணம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
எரிபொருள் விலை குறைப்புக்கு அமைய பஸ் கட்டணம் 12.09 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய கட்டண திருத்தப் படிவம் அனைத்து மாகாணங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சகல பஸ்களிலும் புதிய கட்டண படிவம் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
புதிய பஸ் கட்டண திருத்தத்தை அமுல்படுத்தாத பஸ் சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.
பொது போக்குவரத்து ஊடாக சேவை சட்டத்தின் பிரகாரம் பாடசாலை மாணவர் பஸ் மற்றும் வேன் சேவை மற்றும் முச்சக்கர வண்டி சேவை ஆகியவற்றின் கட்டணங்களை கண்காணிக்கும் அதிகாரம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு கிடையாது.
நடைமுறைக்கு சாத்தியமான வகையில் சட்டத்தை திருத்தியமைக்குமாறு போக்குவரத்து அமைச்சிடம் வலியுறுத்தியுள்ளோம். இதற்கமைய சட்டத்திருத்த இறுதி வரை சட்டமாதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பாடசாலை வேன்,பஸ் மற்றும் முச்சக்கர வண்டி ஆகியவற்றின் கட்டணங்களை கண்காணிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்படும் என்றார்.