கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் சீனாவில் பிறப்பு, இறப்பு விகிதங்களில் பெரும் மாற்றம் நிகழ்ந்து உள்ளது. சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக இறப்பு எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
குழந்தை பிறப்பு விகிதமும் சரிந்து உள்ளது. இதன்படி, சீனாவின் பிறப்பு விகிதம் கடந்த 2022-ம் ஆண்டு ஆயிரம் பேருக்கு 7.52 என்ற அளவில் இருந்தது. அது நடப்பு ஆண்டில் 6.77 என்ற அளவில் குறைந்து உள்ளது.
இதன்படி, கடந்த 1961-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இதுவரை இல்லாத வகையில் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. இதனையடுத்து, சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிப்பதற்கு பல நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகிறது.
இதன்படி, ஒரு குழந்தை மட்டுமே பெற்று கொள்ளும் சட்டம் 2015-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டு 3 குழந்தைகள் வரை பெற்று கொள்ள அரசு அனுமதி அளித்தது.
ஆனாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து, திருமணம் ஆகாதவர்கள் கூட குழந்தை பெற்று கொள்வதற்கு சிச்சுவான் மாகாண அரசு அனுமதி அளித்தது.
இந்த நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கையாக, பல்கலைக்கழக மாணவர்களிடம் விந்தணு தானம் செய்வதற்கு முன் வருமாறு வேண்டுகோள் விடப்பட்டது.
இந்த நிலையில், பிறப்பு விகிதம் சரிவை எதிர்கொள்ளும் வகையில் சீனா, மற்றொரு முயற்சியில் இறங்கி உள்ளது.
இதன்படி, சீனாவில் உள்ள 9 கல்வி மையங்களை சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கு நடப்பு ஏப்ரலில் இருந்து முதல் வாரத்தில் காதல் செய்ய விடுமுறை அளிப்பது என்பதே அந்த திட்டம்.
அரசின் அனுமதியுடன் கல்வி நிலையங்கள் இந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்து உள்ளன. அந்த நாளில் காதலில் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தது 9 கல்லூரிகளில் இந்நடைமுறை அமலுக்கு வருகிறது.
இதன்படி, ஏப்ரல் 1முதல் 7 வரை மாணவ மாணவியர்களுக்கு விடுப்பு வழங்கப்பட்டு, அவர்கள் இயற்கையை காதலிப்பதற்கும், வாழ்க்கையை காதலிப்பதற்கும் மற்றும் விடுமுறையை அனுபவித்து காதலை கொண்டாடவும் கல்வி நிறுவனங்கள் ஊக்கப்படுத்தி உள்ளன.