சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணைக் கேப்டனான சுரேஷ் ரெய்னா, மாமா உள்ளிட்ட இருவரை கொலை செய்த குற்றவாளிகளை கண்டுபிடியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.சுரேஷ் ரெய்னாசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணைக்கேப்டனாக இருப்பவர் சுரேஷ் ரெய்னா. ஐபிஎல் 13-வது சீசனில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்றிருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திடீரென ஐபிஎல் தொடரில் இருந்து விலகி இந்தியா திரும்பினார். தனிப்பட்ட விசயத்திற்கான விலகியதாக தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே பஞ்சாப் மாநிலத்தில் வசித்து வந்த ரெய்னாவின் மாமாவின் வீட்டில் கொள்ளையர்கள் புகுந்து கொள்ளையடித்தனர். இந்த சம்பவத்தில் கொள்ளையர்கள் மாமாவை கொலை செய்தனர். மேலும் ரெய்னாவின் அத்தைகள் உள்பட சிலர் படுகாயம் அடைந்தனர்.
தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று பஞ்சாப் மாநில போலீசாருக்கு ரெய்னா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுரேஷ் ரெய்னா இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘எனது குடும்பத்தினருக்கு நடைபெற்ற சம்பவம் படுபயங்கரமானது. எனது மாமா படுகொலை செய்யப்பட்டுள்ளார். எனது அத்தை மற்றும் சொந்தக்காரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். கடந்த சிலநாட்களாக சிகிச்சை பெற்று வந்த உறவினர் நேற்றிரவு துரதிருஷ்டவசமாக உயிரிழந்தார். எனது அத்தை மிகமிக ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
சம்பவம் நடைபெற்ற அன்று என்ன நடந்தது? யார் செய்தார்கள்? என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த பஞ்சாப் போலீசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள நாங்கள் தகுதியானவர்கள். அந்த குற்றவாளிகள் அதிக குற்றங்களைச் செய்ய விடக்கூடாது’’ என்று தெரிவித்துள்ளார்.