பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு இருப்பது போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்களால் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
செடன் பார்க், ஹமில்டன் மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 163 ஓட்டங்களை பெற்றுக்கொனது.
அவ்வணி சார்பாக அதிரடியாக துடுப்பெடுத்தாடிய மொஹமட் ஹபீஸ் ஆட்டமிழக்காமல் 99 ஓட்டங்களையும் மொஹமட் ரிஸ்வான் 22 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக டிம் சவுதி 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதனை அடுத்து 164 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற அடிப்படையில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 19.2 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட்டினை மாத்திரமே இழந்து வெற்றி இலக்கை கடந்தது.
அவ்வணி சார்பாக டிம் சீஃபர்ட் 84 ஓட்டங்களையும் அணித்தலைவர் கேன் வில்லியம்சன் 57 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக பஹீம் அஷ்ரப் ஒரு விக்கெட்டினை வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருப்பது தொடரை 2-0 என்ற அடிப்படையில் நியூசிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.
மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருப்பது போட்டி 22 ஆம் திகதி மெக்லீன் பார்க், நேப்பியர் மைதானத்தில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.