இங்கிலீஷ் பிரிமியர் லீக் கால்பந்து தொடரில், டொட்டன்ஹாம் அணியும் வோல்ஸ் அணியும் மோதிய போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மோலினக்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், இரண்டு அணிகளும் ஆக்ரோஷமாக களமிறங்கின.
போட்டியின் முதல் நிமிடத்திலேயே டொட்டன்ஹாம் அணியின் வீரரான டென்காய் ன்டொம்பிலி அணிக்காக முதல் கோலை அடித்து அனைவரையும் ஆச்சரியப் படுத்தினார்.
தொடர்ந்து வோல்ஸ் அணி பதில் கோல் போடுவதற்கு கடுமையாக போராடியது. எனினும் அதற்கு டொட்டன்ஹாம் அணி வழிவிடவில்லை.
அத்துடன் டொட்டன்ஹாம் அணி முன்னிலை கோலை புகுத்துவதற்கு முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை.
இதனால் போட்டியின் முற்பாதியில் டொட்டன்ஹாம் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.
இதனையடுத்து இரண்டாவது பாதியிலும் இரு அணிகளும் கோல் போடுவதற்கு கடுமையாக போராடின. இதன்பலன் வோல்ஸ் அணிக்கு கிட்டியது.
போட்டியின் 86ஆவது நிமிடத்தில் வோல்ஸ் அணியின் வீரரான ரோமெய்ன் சைஸ் அடித்து கோல் கணக்கை சமநிலைப் படுத்தினார்.
இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால், வெற்றி கோலை போடுவதற்கு இரு அணிகளும் களத்தில் முட்டி மோதிக் கொண்டன.
எனினும் இரு அணிகளால் முயற்சித்தும் வெற்றி கோலை புகுத்த முடியவில்லை. இதனால் இப்போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
நடப்பு புள்ளிப்பட்டியலை பொறுத்தவரை டொட்டன்ஹாம் அணி 26 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், வோல்ஸ் அணி 21 புள்ளிகளுடன் 11ஆவது இடத்திலும் உள்ளன.