பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தர் சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தை (ஐ.சி.சி) கடுமையாக சாடியுள்ளார்.
ஐ.சி.சி. கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பாக விளையாடிய நபர்களை கொண்டு கனவு ஒருநாள், டெஸ்ட் மற்றும் இருபதுக்கு -20 கிரிக்கெட் அணியை நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி தலைமையிலான 11 பேர் கொண்ட இருபதுக்கு : 20 கனவு அணியில் ரோகித் சர்மா, கிறிஸ் கெய்ல், ஆரோன் பின்ஞ், விராட் கோலி, ஏ.பி.டி.வில்லியர்ஸ், கிளேன் மெக்ஸ்வெல், கிரன் பொல்லார்ட், ரஷித் கான், ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் லசித் மலிங்க ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் இதில் பாகிஸ்தான் வீரர்கள் எவரும் உள்ளடக்கபடாமையினால் அதிருப்தியடைந்த ஷோயிப் அக்தர் தனது யூடியூப் சேனலில், தசாப்த கால அணியை உலக கிரிக்கெட் அணியாக இல்லாமல் ஐ.பி.எல். லெவன் அணி என்று சாடியுள்ளார்.
தசாப்த கால அணியானது உலக கிரிக்கெட் அணியாக அல்லாமல் ஐ.பி.எல். அணியாக உள்ளமையினால் உங்கள் (ஐ.சி.சி) டி 20 அணி எங்களுக்கு தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.
அது மாத்திரமன்றி தற்போதைய பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் ஆசாமின் துடுப்பாட்டத்தை மேற்கொளிட்டு பேசிய அவர், பாபர் அசாம் இருபதுக்கு : 20 போட்டிகளில் நம்பர் 1 துடுப்பாட்ட வீரராக உள்ளார். எனினும் அவர் தசாப்தத்தின் அணியில் தேர்வு செய்யப்படவில்லை.
2015 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் அறிமுகமான பாபர் அசாம், 44 இருபதுக்கு : 20 போட்டிகளில் விளையாடி 50 க்கும் மேல் சராசரியை பதிவுசெய்துள்ளார். மேலும் அவர் 1681 ஓட்டங்களையும், 130 ஸ்ட்ரைக் வீதத்தையும் பெற்றுள்ளதாகவும் ஐ.சி.சி.யின் கவனத்துக்கு சுட்டிக்காட்டினார்.
அது மாத்திரமன்றி பாகிஸ்தானும் ஐ.சி.சி உறுப்பினராக இருப்பதை ஐ.சி.சி மறந்துவிட்டது என சாடிய ஷோயிப் அக்தர், பணம் மற்றும் நிதியுதவி உரிமைகள் பற்றி மட்டுமே ஐ.சி.சி. சிந்திப்பதாகவும் குற்றம் சாட்டினார்.