Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் முதல் போட்டியில் 7 விக்கெட்டுகளால் இங்கிலாந்து வெற்றி

முதல் போட்டியில் 7 விக்கெட்டுகளால் இங்கிலாந்து வெற்றி

2 minutes read

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் இலங்கை அணியுடன் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வந்தது.

கடந்த 14 ஆம் திகதி காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான தொடரின் முதல் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி தனது முதல் இன்னிங்ஸுக்காக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து  135 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, அணித் தலைவர் ஜோ ரூட்டின் இரட்டை சதத்துடன் (228) 421 ஓட்டங்களை பெற்றது.

அதனால் 286 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2 ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி லஹிரு திரிமான்னவின் சதத்தின் உதவியுடன் 359 ஓட்டங்களை பெற்றது.

இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 74 ஓட்டம் என்ற இலகுவான வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த எளிய இலக்கை இங்கிலாந்து வீரர்கள் நேற்றே எடுத்து விடுவார்கள் என்று எதிர்பார்த்த வேளையில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து வீரர்களை திக்குமுக்காட வைத்தனர்.

ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய ஜாக் கிராலி மற்றும் டொமினிக் சிபிலி ஆகியோரை எம்புல்தெனிய தனது சுழற்பந்து வீச்சு மூலமாக குறைந்த ஓட்டத்துடன் ஆட்டமிழக்கச் செய்து வெளியேற்றினார். 

அதன் பின்னர் களமிறங்கிய அணித் தலைவர் ஜோ ரூட்டும் ஒரு ஓட்டத்தை மாத்திரம் பெற்று, ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

இதனால் இங்கிலாந்து அணி 14 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. எனினும் நான்காவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த பெயர்ஸ்டேவும், டேனியல் லாரன்ஸும் விக்கெட்டுக்களை பறிகொடுக்காமல் பாதுகாத்துக் கொண்டனர்.

இறுதியாக நேற்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 15 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 38 ஓட்டங்களை எடுத்தது. 

போட்டியின் ஐந்தாவதும், இறுதியமான நாளான இன்று வெற்றிக்கு 36 ஓட்டங்கள் மாத்திரம் தேவை என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியானது 24.2 ஓவரில் மூன்று விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 76 ஓட்டங்களை பெற்று, வெற்றியிலக்கை கடந்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட் தெரிவானார்.

இவ்விரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 22 ஆம் திகதி அதே மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More