15 வருடமாக இலங்கை கிரிக்கெட்டுக்காக விளையாடிவந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தனது பேஸ்புக் பக்கத்தினூடாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது,
“அன்புள்ள நண்பர்களே,
“எல்லா நல்ல விடயங்களுக்கும் ஒரு முடிவு உண்டு” என்ற பழமொழிக்கு ஏற்றவாறு எனக்கு சகலவற்றையும் வழங்கிய என்னுடைய 15 வருடகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு நான் முற்றுப்புள்ளி வைக்கலாம் என முடிவு செய்துள்ளேன்.
சந்தோஷமான நினைவுகளையும் நல்ல நண்பர்களையும் உருவாக்கிய இந்த பயணத்திலிருந்து இப்போது நான் ஓய்வு பெறுகிறேன். என் மீது இத்தனை காலமாக நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இலங்கை கிரிக்கெட்டுக்கு எப்போதும் நான் நன்றியுடையவனாகிறேன். நான் துவண்டு போன நேரங்களில் என்னோடு இருந்த குடும்பத்தினர், நண்பர்கள், நலன் விரும்பிகள், ரசிகர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். இலங்கை கிரிக்கெட்டுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். எதிர்காலத்தில் மிகச்சிறப்பாக இந்த அணி மீண்டு வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
எல்லோருக்கும் நன்றி.” என்று குறிப்பிட்டுள்ளார்.