இலங்கை றக்பி நிறுவனத்தினால் (ஸ்ரீலங்கா றக்பி) கொழும்பு கிங்ஸ்பறி ஹொட்டேலில் நடத்தப்பட்ட 2022 றக்பி விருது விழாவில் கண்டி விளையாட்டுக் கழக வீரர் தரிந்த ரத்வத்த, வருடத்தின் அதி சிறந்த றக்பி வீரருக்கான விருதை வென்றெடுத்தார்.
முதல் தர கழகங்களுக்கு இடையிலான றக்பி லீக் போட்டியில் 22ஆவது தடவையாக சம்பியனான கண்டி விளையாட்டுக் கழகத்திற்கான வெற்றி கிண்ணத்தை பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட நிப்பொன் பெய்ன்ட்ஸ் லிமிட்டெட் பொது முகாமையாளர் நேமன்த அபேசிங்கவிடமிருந்து அணித் தலைவர் தமித் திசாநாயக்க பெற்றுக்கொண்டார்.
இந்த வருட றக்பி லீக் போட்டியில் ஹெவ்லொக்ஸ் கழகம் இரண்டாம் இடத்தைப் பெற்றது.
கோப்பை பிரிவில் கடற்படை கழகம் சம்பியன் பட்டத்தை சுவீகரித்ததுடன் விமானப்படை 2ஆம் இடத்தைப் பெற்றது.
இவ் விருது விழாவில் பேசிய அபேசிங்க, ‘இத்தகைய விருது விழாவை நடத்திய இலங்கை றக்பி நிறுவனம் பாராட்டுக்குரியது. அனுசரணை என்பது விளையாட்டுத்துறையுடன் தொடர்புபட்டது. நாட்டிலுள்ள இளம் விளையாட்டுத்துறை வீரர்களை வளர்த்து சமூகத்தில் தலைமைத்துவத்தை ஏற்பதற்கு அவர்களை வழிநடத்துவது எமது பிரதான நோக்கமாகும். இவ் விடயத்தில் றக்பி முக்கிய பங்கு வகிக்கிறது. மிகவும் இறுக்கமாகவும் கடினமாகவும் மோதிக்கொள்ளப்படும் இப் போட்டியில் வெற்றியார்களும் தோல்வியாளர்களும் இருப்பார்கள். ஆனால் விளையாட்டு வீரர்களுக்கு உரிய பாணியில் அனைவரும் அந்த முடிவுகளை நல்லமனதுடன் ஏற்றுக்கொள்கின்றனர். றக்பியை வளர்ப்பதற்கு எமது அனுசரiணை தொடர்வதற்கு எண்ணியுள்ளோம்’ என்றார்.
விருது விழாவில் உரையாற்றிய இலங்கை றக்பி நிறுவனத் தலைவர் ரிஸ்லி இலியாஸ், ‘நிப்பொன் பெய்ன்ட்ஸ் லிமிட்டெட் வழங்கிய அனுசரணையை பெறுமதிவாய்ந்த ஒன்றாக கருதுகிறோம். இலங்கையில் றக்பியை முன்னேற்றுவதற்கு அவர்களது ஒத்துழைப்பு நீண்டகாலம் தொடரும் என நம்புகிறோம். கொவிட் – 19 தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்டி ஆகியவற்றால் இலங்கை நொந்துபோய் இருந்தவேளையில் பிரச்சினைகளை புறந்தள்ளிவிட்டு றக்பியை வெற்றிகரமாக நடத்தி முடிக்க நிப்பொன் பெய்ன்ட் லிமிட்டெட் அனுசரணை பெரிதும் உதவியது’ என்றார்.
இவ் விழாவில் நிப்பொன் பெய்ன்ட்ஸ் லிமிட்டெட் பொது முகாமையாளர் நேமன்த அபேசிங்கவுக்கு நினைவுச் சின்னம் ஒன்றை ரிஸ்லி இலியாஸ் வழங்கினார்.