தெற்காசிய கூடைப்பந்து சங்கம் ஏற்பாடு செய்து மாலைதீவில் நடைபெற்ற தெற்காசிய பெண்கள் கூடைப்பந்து போட்டியில் இலங்கை அணி சம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளது.
நான்கு நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டி லீக் முறையில் நடைபெற்றதோடு இதில் மூன்று வெற்றிகளைப் பெற்றதன் மூலமே இலங்கை அணி சம்பியனாகியுள்ளது.
இதில் பூட்டானுக்கு எதிரான போட்டியில் 98–33 என்ற புள்ளிகளால் இலகு வெற்றியை பெற்ற இலங்கை வீராங்கனைகள், நேபாளத்திற்கு எதிரான போட்டியில் 55–49 என தோல்வி அடைந்தது. எனினும் தான் பங்கேற்ற இறுதிப் போட்டியில் மாலைதீவை எதிர்கொண்ட இலங்கை அந்தப் போட்டியை 72–59 என வென்று அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளை பெற்று தொடரில் சம்பியனானது.
இலங்கை மற்றும் நேபாளம் தலா இரண்டு போட்டிகளில் வென்று ஒன்றில் தோற்றபோதும் தொடர் முழுவதும் எதிரணிக்கு எதிராக பெற்றுக்கொண்ட மொத்தப் புள்ளிகள் மற்றும் எதிரணிக்கு விட்டுக்கொடுத்த மொத்தப் புள்ளிகள் அடிப்படையில் இலங்கை தொடரில் சம்பியனானதோடு நேபாளம் இரண்டாம் இடத்தை பெற்றது.
இதன்போது இலங்கை வீராங்கனைகள் எதிரணிக்கு 147 புள்ளிகளை விட்டுக்கொடுத்து, மொத்தம் 219 புள்ளிகளை பெற்றிருந்தது.