இந்தியாவின் இரண்டாம் நிலை அணிக்கு எதிராக லக்னோவில் வியாழக்கிழமை (06) மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய முதலாவது பகல் இரவு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்கா 9 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
இந்தத் தொடர் ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் சுப்பர் லீக் தொடராகவும் அமைகின்றது.
அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐசிசி ஆடவர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ள ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, இன்றைய தினம் அவுஸ்திரேலியா பயணமான நிலைவில் ஷிக்கர் தவான் தலைமையிலான இரண்டாம் நிலை இந்திய அணி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தென் ஆபிரிக்காவை எதிர்த்தாடுகிறது.
ஹென்றிச் க்ளாசென், டேவிட் மில்லர் ஆகிய இருவரின் அபார துடுப்பாட்டங்கள் தென் ஆபிரிக்காவின் வெற்றிக்கு வித்திட்டன. குவின்டன் டி கொக்கும் திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆபிரிக்கா 1 – 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
சீரற்ற காலநிலை காரணமாக ஒன்றேமுக்கால் மணித்தியாலம் தாமதித்து ஆரம்பமான இப் போட்டி அணிக்கு 40 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டு நடத்தப்பட்டது.
தென் ஆபிரிக்காவினால் நிர்ணயிக்கப்பட்ட 250 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா, 40 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 240 ஓட்டங்களைப் பெற்று 9 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.
அணித் தலைவர் ஷிக்கர் தவான் (4), ஷுப்மான் கில் (3) ஆகிய இருவரும் மிகக் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்ததால் இந்தியா பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது. (8 – 2 விக்.)
இதனைத் தொடர்ந்து ருத்துராஜ் கய்க்வாட் (18), இஷான் கிஷான் (20) ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு தெம்பைக் கொடுத்தனர்.
ஆனால் அவர்கள் இருவரும் 3 ஓட்டங்கள் வித்தியாத்தில் ஆட்டமிழக்க மீண்டும் இந்தியா நெருக்கடிக்குள்ளானது.
எனினும் ஷ்ரேயஸ் ஐயர், சஞ்சு செம்சன், ஷர்துல் தாகூர் ஆகிய மூவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி தென் ஆபிரிக்காவுக்கு சவால் விடுத்தனர்.
ஷ்ரேயஸ் ஐயர், சஞ்சு செம்சன் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு நம்பிக்கை ஊட்டினர். ஐயர் சரியாக 50 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டமிழந்து சென்றார்.
தொடர்ந்து சஞ்சு செம்சனும் ஷர்துல் தாகூரும் 5ஆவது விக்கெட்டில் 97 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்;கையை 211 ஓட்டங்களாக ஆக்கிய போது தாகூர் 33 ஓட்டங்களுடன் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து குல்தீப் யாதவ் (0), ஆவேஷ் கான் (3) ஆகிய இருவரும் ஆட்டமிழந்தனர்.
இதேவேளை தனி ஒருவராக போராடிய சஞ்சு செம்சன் 63 பந்துகளில் 9 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 86 ஓட்டங்களைக் குவித்தபோதிலும் அது இறுதியில் வீண் போனது.
தென் ஆபிரிக்க பந்துவீச்சில் லுங்கி நிகிடி 52 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கெகிசோ ரபாடா 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தென் ஆபிரிக்கா 40 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 249 ஓட்டங்களைக் குவித்தது.
ஜான்மன் மாலன் (22), டெம்பா பவுமா (8), ஏய்டன் மார்க்ராம் (0), ஆகிய மூவரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர். 16 ஓவர்கள் நிறைவில் தென் ஆபிரிக்கா 3 விக்கெட்களை இழந்து 71 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது. இதன் காரணமாக தேன் ஆபிரிக்கா 200 ஓட்டங்களைப் பெறுமா என்ற சந்தேகம் நிலவியது.
போதாக் குறைக்கு 23ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களாக இருந்தபோது குவின்டன் டி கொக் 48 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
ஆனால், ஹென்றிச் க்ளாசென், டேவிட் மாலன் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 106 பந்துகளில் பெறுமதிமிக்க 139 ஓட்டங்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்காவை பலப்படுத்தினர்.
ஹென்றிச் க்ளாசென் 65 பந்துகளில் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 74 ஓட்டங்களுடனும் டேவிட் மில்லர் 63 பந்தகளில் 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக 75 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
இந்திய பந்துவீச்சில் ஷர்துல் தாகூர் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.