Sunday, May 5, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு ரி20 உலகக் கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து

ரி20 உலகக் கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து

4 minutes read

அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று நிறைவுக்கு வந்த எட்டாவது ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் இங்கிலாந்து உலக சம்பியன் பட்டத்தை சூடியது.

பாகிஸ்தானுக்கு எதிராக இன்று ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் ஒரு ஓவர் மீதமிருக்க 5 விக்கெட்களால் வெற்றி பெற்ற இங்கிலாந்து, 2ஆவது தடவையாக இருபது 20 உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது.

இதன் மூலம மேற்கிந்தியத் தீவுகளுக்கு அடுத்ததாக 2 தடவைகள் இருபது 20 உலகக் கிண்ணத்தை வென்றெடுத்த 2ஆவது அணி என்ற பெருமையை இங்கிலாந்து பெற்றுக்கொண்டது.

அத்துடன் 30 வருடங்களுக்கு முன்னர் இதே விளையாட்டரங்கில் நடைபெற்ற 1992 உலகக் கிண்ண (50 ஓவர்) இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் 22 ஓட்டங்களால் அடைந்த தோல்வியை இன்றைய வெற்றி மூலம் இங்கலாந்து நிவர்த்தி செய்துகொண்டது.

பாகிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட சுமாரான 138 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 19 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 138 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டி உலக சம்பியனானது.

சாம் கரன், ஆதில் ராஷித், கிறிஸ் ஜோர்டன் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள், பென் ஸ்டோக்ஸின் சகலதுறை ஆட்டம் என்பன இங்கிலாந்து உலக சம்பினாவதை உறுதிசெய்தன.

ஆனால், இந்த வெற்றி இங்கிலாந்துக்கு இலகுவாக அமைந்தது என்று கூறமுடியாது. பாகிஸ்தான் 15ஆவது ஓவர்வரை கடுமையாகப் போராடியது.

கடைசியில் பென் ஸ்டொக்ஸ், மொயீன் அலி ஆகியோரின் அதிரடிகள் ஆட்டத்தின் முடிவை இங்கிலாந்துக்கு சாதகமாக்கியது.

எவ்வாறாயினும் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்தின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. ஷஹீன் ஷா அப்றிடியின் முதலாவது ஓவரில் அதிரடி வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் (1) போல்ட் ஆனார்.

மொத்த எண்ணிக்கை 32 ஓட்டங்களாக இருந்தபோது ஹரிஸ் ரவூப்பின் பந்துவீச்சில் இப்திகார் அஹ்மதிடம் பிடிகொடுத்து பில் சோல்ட் (10) வெளியேறினார்.

13 ஓட்டங்கள் கழித்து ஹரிஸ் ரவூப்பின் பந்தை அரை குறை மனதுடன் அடித்த அணித் தலைவர் ஜொஸ் பட்லர் (26) விக்கெட் காப்பாளர் மொஹம்த ரிஸ்வானிடம் இலகுவான பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

பவர் ப்ளே நிறைவில் இங்கிலாந்து 3 விக்கெட்களை இழந்து 49 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

அதனைத் தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ், ஹெரி ப்றூக் ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 39 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஷதாப் கானின் பந்தை விசுக்கி அடித்த ஹெரி ப்றூக் (20) ஷஹீன் ஷா அப்றிடியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். (12.3 ஓவர்களில் 84 – 4 விக்.)

முன்னதாக பாகிஸ்தான் 11.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 84 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இந் நிலையில் போட்டி சம அளவில் மோதிக்கொள்ளப்பட்ட வண்ணம் இருந்ததுடன் எந்த அணியும் வெற்றிபெறலாம் என்ற நிலை உருவானது.

15 ஓவர்கள் நிறைவில் இங்கிலாந்து 4 விக்கெட்களை இழந்து 97 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.

16ஆவது ஓவரின் முதலாவது பந்தை மிகத் துல்லியமாக வீசிய ஷஹீன் ஷா அவ்றிடி, கடும் உபாதையினால் அவதியுற்று களம் விட்டு வெளியேறினார். இது பாகிஸ்தானுக்கு பேரிடியைக் கொடுத்தது. அவரது ஓவரை இப்திகார் அஹ்மத பூர்த்தி செய்ய நேரிட்டதுடன் அவரது கடைசி 2 பந்துகளில் ஸ்டோக்கிஸினால் ஒரு பவுண்டறியும் ஒரு சிச்ஸும் விளாசப்பட்டன. இதன் பலனாக ஆட்டம் சிறுக சிறுக இங்கிலாந்தின் பக்கம் திரும்பியது.

பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது மொயீன் அலியின் விக்கெட்டை மொஹமத் வசிம் நேரடியாகத் தகர்த்தார். மொயின் அலி 19 ஓட்டங்களைப் பெற்றார். (132 – 5 விக்.)

எனினும் பென் ஸ்டோக்ஸும் லியாம் லிவிங்ஸ்டனும் வெற்றிக்கு தேவைப்பட்ட எஞ்சிய 6 ஓட்டங்களைப் பெற்று இருபது 20 உலகக் கிண்ணம் இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்படுவதை உறுதிசெய்தனர்.

பென் ஸ்டோக்ஸ் 49 பந்துகளில் 5 பவுண்டறிகள், 1 சிக்ஸ் உட்பட 52 ஓட்டஙகளுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

லியாம் லிவிங்ஸ்டன் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றது.

களத்தடுப்பில் ஈடுபட்ட இங்கிலாந்துக்கு ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் ஆகிய இருவரும் தத்தமது ஓவர்களை முறையே நோபோல் மற்றும் வைட்டுடன் ஆரம்பித்தனர்.

எவ்வாறாயினும் மூன்றாவது பந்துவிச்சாளர் சாம் கரன் தனது 2ஆவது ஓவரில் மொஹமத் ரிஸ்வானின் விக்கெட்டைப் பதம்பார்க்க இங்கிலாந்து சிறு ஆறுதல் அடைந்தது. ரிஸ்வான் 15 ஓட்டங்களைப் பெற்றார்.

பவர் பிளே நிறைவில் பாகிஸ்தான் ஒரு விக்கெட்டை இழந்து 39 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

7ஆவது ஓவரில் பந்துவீச்சில் அறிமுகமான ஆதில் ராஷித் வீசிய முதல் பந்திலேயே மொஹமத் ஹாரிஸ் (8) ஆட்டமிழக்க பாகிஸ்தான் நெருக்கடியை எதிர்கொண்டது. (45 – 2 விக்.)

அணித் தலைவர் பாபர் அஸாம், ஷான் மசூத் ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி அணியைக் கட்டியெழுப்ப முயற்சித்தனர். ஆனால் அவர்கள் இருவரும் 3ஆவது விக்கெட்டில் 39 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ராஷித்தின் பந்துவீச்சில் அவரிடமே பிடிகொடுத்து 32 ஓட்டங்களுடன் பாபர் அஸாம் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து இப்திகார் அஹ்மத் ஓட்டம் பெறாமல் களம் விட்டகன்றார். (85 – 4 விக்.)

ஷான் மசூத் (38), ஷதாப் கான் (20) ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 36 ஓட்டங்களைப் பகிர்ந்த பின்னர் பாகிஸ்தானின் விக்கெட்கள் சீரான இடைவெளியில் விழத் தொடங்கின.

20 ஓவர்கள் நிறைவில் பாகிஸ்தான் 8 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

சிறப்பாக பந்துவீசிய சாம் கரன் 4 ஓவர்களில் 12 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆதில் ராஷித் ஒரு ஓட்டமற்ற விக்கெட் ஓவர் உட்பட 4 ஓவர்களைத் தொடர்ச்சியாக நிறைவுசெய்து 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.கிறிஸ் ஜொர்டன் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் ஆகிய இரண்டு விருதுகளையும் சாம் கரன் தனதாக்கிக்கொண்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More