சிங்கப்பூரில் அங்குரார்ப்பண ஒலிம்பிக் ஈஸ்போர்ட்ஸ் வாரம் (Olympic Esports Week) நடைபெறும் என்பதை சர்வதேச ஒலிம்பிக் குழு இன்று புதன்கிழமை (16) உறுதிசெய்தது.
ஒலிம்பிக் ஸ்போர்ட்ஸ் வாரம் சிங்கப்பூர் நகரில் 2023ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் திகதியிலிருந்து 25ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
ஒலிம்பிக் இயக்கத்தில் மெய்நிகர் விளையாட்டுக்களின் வளர்ச்சியை ஆதரிப்பதற்கும் போட்டியாளர்களின் பங்களிப்பை மேலும் அதிகரிப்பதற்கும் அடுத்த கட்ட பிரதான நடவடிக்கையாக இந்த அறிவிப்பு அமைகிறது.
கலாசார அமைச்சு, சமூக மற்றும் இளையோர், சிங்கப்பூர் விளையாட்டுத்துறை, சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் குழு ஆகியவற்றுடன் கூட்டிணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒலிம்பிக் ஈஸ்போர்ட்ஸ் வாரம் மெய்நிகர் விளையாட்டுத்துறையின் அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்தவுள்ளது.
இந்த நான்கு நாள் கொண்டாட்டத்தின்போது நவீன தொழில்நுட்பங்கள் வெளிப்படுத்தப்படுவதுடன் கூட்டு ஆலோசனைகள், கல்வி அமர்வுகள், போட்டிகள் ஆகியனவும் இடம்பெறும்.
கடந்த வருடம் ஒலிம்பிக் மெய்நிகர் தொடர் வெற்றிகரமாக அமைந்ததை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச சம்மேளனங்களுடன் (International Federations) இணைந்து உருவாக்கப்பட்ட உலகளாவிய மெய்நிகர் மற்றும் மாதிரி விளையாட்டுப் போட்டியான ஒலிம்பிக் ஈஸ்போர்ட்ஸ் தொடரில் முதலாவது நேரலை இறுதிப் போட்டி நடைபெறவுள்ளமை ஒலிம்பிக் ஈஸ்போரட்ஸ் வாரத்தின் சிறப்பம்சமாகும்.
2021இல் நடைபெற்ற தொடரில் 100 நாடுகளைச் சேர்ந்த 250,000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பேஸ்போல், மோட்டர்ஸ்போர்ட், சைக்கிளோட்டம், துடுப்புப் படகோட்டம் மற்றும் பாய்மரப் படகோட்டம் உள்ளிட்ட மெய்நிகர் மற்றும் மாதிரி விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றியிருந்தனர்.
ஒலிம்பிக் குழுத் தலைவர் கருத்து
ஒலிம்பிக் ஈஸ்போர்ட்ஸ் வாரம் தொடர்பான அறிவித்தல் குறித்து பேசிய சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெக், ‘ஒலிம்பிக் இயக்கத்தில் மெய்நிகர் விளையாட்டுகளின் வளர்ச்சியை ஆதரிப்பது எங்கள் இலட்சியமாகும்.
அதில் ஓர் அம்சமான முதலாவது ஒலிம்பிக் ஈஸ்போர்ட்ஸ் வாரம் ஒரு முக்கிய மைல்கல்லை குறிக்கிறது.
எமது மெய்நிகர் விளையாட்டு போட்டியின் அற்புதமான புதிய வடிவம், முதல் முறையாக நேரடி இறுதிப் போட்டிகளுடன் நடத்தப்பட உள்ளது.
இது ஈஸ்போர்ட்ஸ் வீரர்களுடன் மேலும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பை உருவாக்க உதவுவதுடன் வீரர்களுக்கும் இரசிகர்களுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் வழிவகுக்கிறது.
ஒலிம்பிக் இயக்கத்தில் புதுமைகளை புகுத்திய மற்றும் ஆதரவு வழங்கிய வரலாற்றைக் கொண்ட சிங்கப்பூருடன் கூட்டுசேர்வதற்கு இதுவே சரியான சந்தர்ப்பமாகும்.
இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் அங்குரார்ப்பண அத்தியாயத்தை அரங்கேற்றிய சிங்கப்பூருடன் நெருக்கமாக இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளளோம்’ என்றார்.
இது தொடர்பாக பேசிய சிங்கப்பூர் ஒலிம்பிக் குழுவின் சபை உறுப்பினரும் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் உதவித் தலைவருமான நிக் சேர் மியாங், ‘மெய்நிகர் விளையாட்டு நிகழ்ச்சிகளை விரிவுபடுத்தி ஊக்குவிக்கும் ஒலிம்பிக் இயக்கத்தின் அபிலாஷைகளைப் பகிர்ந்துகொள்வதில் சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் குழு பெருமை அடைகிறது.
மெய்நிகர் ஈஸ்போர்ட்ஸ் மற்றும் ஈஸ்போர்ட்ஸ் நாட்காட்டியில் மிகப்பெரிய நிகழ்ச்சிகள் சிலவற்றை வெற்றிகரமாக நடத்தியதில் சிங்கப்பூர் வரலாறு படைத்துள்ளது.
இந்த பகிரப்பட்ட பார்வையை உயிர்பெறச்செய்வதற்கு சர்வதேச ஒலிம்பிக் குழுவுடன் இணைந்துசெயல்படுவதில் நாங்கள் பெருமை அடைகிறோம்’ என்றார்.
முதலாவது ஒலிம்பிக் ஈஸ்போர்டஸ் வாரம் மற்றும் ஒலிம்பிக் ஈஸ்போர்ட்ஸ் தொடரில் எவ்வாறு பங்கேற்கலாம் என்பது உள்ளிட்ட விபரங்கள் 2023ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்படும் என சர்வதேச ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது.