யாழ்ப்பாணம் கல்லூரிக்கும் சென். பெற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையில் யாழ்ப்பாணம் கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை (04) நடைபெற்ற 30ஆவது வருடாந்த ஒருநாள் (50 ஓவர்) கிரிக்கெட் போட்டியில் மிகவும் பரபரப்பான முறையில் ஒரு பந்து மீதமிருக்க 5 ஓட்டங்களால் சென் பெற்றிக்ஸ் வெற்றிபெற்று ராஜன் கதிர்காமர் கிண்ணத்தை சுவீகரித்தது.
துடுப்பாட்டத்தில் அபரிமிதமாக பிரகாசித்து அரைச் சதம் பெற்ற எம். சௌதியன், மிகவும் சாமர்த்தியமாக கடைசி ஓவரை வீசி அணியின் வெற்றியை உறுதிசெய்தார். சகல துறைகளிலும் பிரகாசித்த அவர் எவ்வித சந்தேகத்துக்கும் இடமின்றி ஆட்டநாயகனாக தெரிவானார்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த சென் பெற்றிக்ஸ், ஐ. யெஸ்ரிகன், எம். சௌதியன் ஆகியோரின் சாதனைமிகு 151 ஓட்ட ஆரம்ப விக்கெட் இணைப்பாட்ட உதவியுடன் 47.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றது.
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய எம். சௌதியன் 94 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 82 ஓட்டங்களையும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடிய யெஸ்ரிகன் 103 பந்துகளில் 7 பவுண்டறிகள் ஒரு சிக்ஸுடன் 47 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்கள் இருவரும் மொத்த எண்ணிக்கை 151 ஓட்டங்களாக இருந்தபோது ஆட்டம் இழந்தனர்.
அவர்களைவிட அணித் தலைவர் எஸ். கீர்த்தன் 18 ஓட்டங்களைப் பெற்றதுடன் உதிரிகளாக 26 ஓட்டங்கள் கிடைத்தன.
யாழ்ப்பாணம் கல்லூரி அணி பந்துவீச்சில் எஸ். நர்த்தனன் 48 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பி. பிருந்தன் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரி. ரொய்ஸ் ஜென்சன் 57 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
226 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் கல்லூரி அணி 49.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 220 ஓட்டங்களைப் பெற்று 5 ஓட்டங்களால் கிண்ணத்தை தவறவிட்டது.
முதல் 2 விக்கெட்களை 32 ஓட்டங்களுக்கு இழந்து தடுமாற்றம் அடைந்த யாழ்ப்பாணம் கல்லூரி அணிக்கு 3ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த ரீ. டேமியன், எஸ். மதுஷன் ஆகிய இருவரும் 82 ஓட்டங்களைப் பகிர்ந்து உற்சாகம் கொடுத்தனர்.
டேமியன் 34 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் மதுஷனுடன் 4ஆவது விக்கெட்டில் இணைந்த எஸ். நர்த்தனன் 43 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
79 பந்துகளை எதிர்கொண்ட மதுஷன் 7 பவுண்டறிகள் அடங்கலாக 62 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.
சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய நர்த்தனன் 27 ஓட்டங்களையும் பி. பிரதீப் 25 ஓட்டங்களையும் பெற்றனர்.
தொடர்ந்து பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் கடைசி ஓவரில் யாழ்ப்பாணம் கல்லூரியின் வெற்றிக்கு 8 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
கடைசி ஓவரை துணிச்சலுடன் சாமர்த்தியமாக வீசிய சௌதியன் 2 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்ததுடன் கடைசி விக்கெட் ரன் அவுட் முறையில் விழ சென் பெற்றிக்ஸ் அணி மிகவும் பரபரப்பான வெற்றியை ஈட்டி ராஜன் கதிர்காமர் கிண்ணத்தை சுவீகரித்தது.
சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற 2 நாள் கிரிக்கெட் போட்டியிலும் சென் பெற்றிக்ஸ் வெற்றிபெற்றிருந்தது.
இந்த இரண்டு கல்லூரிகளுக்கும் இடையிலான இருபது 20 கிரிக்கெட் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
விசேட விருதுகள்
ஆட்ட நாயகன் மற்றும் சிறந்த துடுப்பாட்ட வீரர்: எம். சௌதியன் (SPC), சிறந்த பந்துவீச்சாளர்: எஸ். நர்த்தனன் (JC), சிறந்த களத்தடுப்பாளர்: பி. பிரதீப் (JC), சிறந்த சகலதுறை வீரர்: எஸ். மதுஷான் (JC), சிறந்த இணைப்பாட்டம்: எம். சௌதியன் – ஐ. யெஸ்ரிகன் (SPC).
சிறப்பு விருது: ஐ. யெஸ்ரிகன் (SPC), பி. பிருந்தன் (JC).
கிரிக்கெட் ஆர்வ விருது: ரீ. டேமியன் (JC), எஸ். கீர்த்தன் (SPC),