கொரோனா தடுப்பூசி போட்டு விட்டு மதுபானம் அருந்தாதீர் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி எதிர்வரும் 16ம் திகதி முதல் போடப்பட உள்ளது. இத்திட்டத்தை மதுரையில் தமிழக முதல்வர் எடப்பாடி தொடக்கி வைக்கிறார்.
இதற்காக அனைத்து மாவட்டங்களுக்கும் தடுப்பு மருந்து அனுப்பும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. அதன்படி, நேற்று திருச்சியிலிருந்து 9 சுகாதார மாவட்டங்களுக்கு தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டன. இதை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, விஜயபாஸ்கர் ஆகியோர் கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.
பின்னர், அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவிக்ைகயில்’கொரோனா தடுப்பூசியின் முதல் ‘டோஸ்’ போட்டுவிட்டு மது அருந்தக் கூடாது. 2வது ‘டோஸ்’ போடும் வரையிலும் 28 நாட்களுக்கு மது அருந்த கூடாது. எந்த ஒரு அச்சமும் இல்லாமல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
தடுப்பூசி செலுத்தப்பட்டதும் எதிர்ப்பு சக்தி வந்து விட்டது என பொதுமக்கள் எண்ணி விடக் கூடாது. தடுப்பூசி போட்ட 42 நாட்களுக்கு பிறகே நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.
கொரோனா தடுப்பூசி போடுபவர்களை தனிமைப்படுத்த வேண்டாம். தடுப்பூசி தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்.
சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரப்பப்படுகின்றன. அவ்வாறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் நானும் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்வேன்,’ என்றார்.
இதேவேளை இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களுக்கு, சம்பந்தப்பட்ட மாநிலங்களில், மருத்துவமனைகளில் தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவருடன் வந்தவர்கள், தொடர்பில் இருந்த மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. சூழ்நிலை குறித்து உன்னிப்பாக கவனிக்கப்படுவதுடன், மாநிலங்களுக்கு தேவையான அறிவுரை வழங்கப்படுகிறது.