Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை கனடா தமிழர்களின் கேள்விக்கு அனுரவிடம் பதில் இல்லையா? | தீபச்செல்வன்

கனடா தமிழர்களின் கேள்விக்கு அனுரவிடம் பதில் இல்லையா? | தீபச்செல்வன்

4 minutes read

சிறிலங்காவை மாறி மாறி ஆளுகின்ற சிங்களப் பேரினவாதக் கட்சிகள் ஆளும் கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாட்டையும் எதிர்கட்சியாக இருக்கும்போது இன்னொரு நிலைப்பாட்டையும் கொண்டிருப்பதும் இலங்கையில் இனப்பிரச்சினை நீள்வதற்கு முக்கிய காரணமாகும்.

தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்ககூட முன்னைய காலத்தில் எதிர்கட்சித் தலைவராக இருந்த காலத்தில் அரசுக்கு எதிராக அரசியலை நகர்த்துவதற்காக தமிழர்களின் பிரச்சினை குறித்து பேசியபோதும், ஆட்சிக்கு வந்த பின்னர் வழக்கமான சிறிலங்காவின் ஆளும் கட்சி தலைவராக ஆட்சியாளராக நடந்துகொள்ளுகிறார்.

இத்தகைய நேர்மையற்ற அரசியல் நிலைப்பாடே இலங்கையில் இனவழிப்புத் தொடரும் ஈழத் தமிழர் கண்ணீர் சிந்தவும் காரணமாக இருக்கிறது.

கனடாவில் தொடர்கிறதா அநீதி?

இதேபோன்றதொரு நிலைப்பாட்டையே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்காவும் எடுக்கின்றார் என்பதை அவரது அண்மைய காலப் பேச்சுக்களும் நகர்வுகளும் காட்டி நிற்கின்றன.

இந்த நிலையில் அண்மையில் கனடாவுக்கு அனுரகுமார திஸாநாயக்கா சென்றுள்ளார். இதன்போது கனடாவில் வசிக்கும் சிங்கள மக்கள் அவருக்கு வரவேற்பை அளித்துள்ளனர்.

தமிழர்களின் கேள்விக்கு அனுரவிடம் பதில் இல்லையா! கனடாவில் நடந்த சலசலப்பு… | Anura Have No Answer Question The Tamils Canada

இதில் சில ஈழத் தமிழர்களும் கலந்து கொண்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் பதிவாகி வருகின்றன. வெகுசில ஈழத் தமிழர்களே இவ்வாறு கலந்துகொண்டுள்ளனர் என்றும் அவர்கள் எப்போதுமே கொள்கையும் அரசியல் நேர்மையும் இன்றி நடப்பவர்கள் என்றும் அதனால் ஆச்சரியப்பட ஏதுமில்லை என்றும் கனடாவில் வாழ்கின்ற ஈழத் தமிழ் ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த காலத்தில் இமாலயப் பிரகடனத்தை உலகத் தமிழர் பேரவை சிறிலங்கா அரசுடன் இணைந்து மேற்கொண்ட போது அதில் கனேடியத் தமிழ் காங்கிரசும் பங்கெடுத்திருந்தது.

இது கனடா வாழ் ஈழத் தமிழர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. அத்துடன் உலகத் தமிழர் பேரவை, மற்றும் கனேடிய தமிழ் காங்கிரஸ் ஆகியன உலகம் முழுவதில் இருந்தும் பெரும் விமர்சனங்களையும் எதிர்ப்புக்களையும் முகம் கொள்ள நேரிட்டது.

இந்த நிலையில் கனேடிய தமிழ் காங்கிரஸ் தன்னிலை விளக்கம் அளித்ததுடன் இதுபோன்று எதிர்காலத்தி்ல நடவாது என்றும் கூறியிருந்தது.

ஆனால் அனுரவின் கூட்டத்தில் கலந்துகொண்டு முகம் காட்டிய தமிழர்கள் குறித்து மிகவும் விழிப்போடு இருக்க வேண்டும் என்றும் இவர்கள் நாளை மகிந்த வந்தாலும் கலந்துகொள்ளுவார்கள் என்றும் கனேடிய ஊடகவியலாளர் ஒருவர் கூறினார்.

கிளிநொச்சியில் அனுரவின் கூட்டம்

கிளிநொச்சி நகரத்தில் அண்மையில் அனுரா குமாரதிஸாநாயக்காவின் கூட்டம் நடந்தது. இதற்காக உணவு கொடுத்து பேருந்துகளில் பலர் கொண்டு வந்து இறக்கப்பட்டார்கள்.

அவர்கள் கிளிநொச்சியை சேர்ந்தவர்களா என்று தெரியவில்லை. ஆனால் அனுரா குமாரவின் கூட்டம் கிளிநொச்சியில் நடந்துகொண்டிருந்த போது அதற்கு எதிராக பலர் குமுறலைக் கொண்டிருந்தனர்.

இதேவேளை குறித்த மாநாடு நடைபெற்ற இடத்திற்கு எதிரில் முன்னாள் பிரதேசபை உறுப்பினர் ஒருவர் ஜேவிபிக்கும் அனுராவிற்கும் எதிராக தனியொருவராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

தமிழர்களின் கேள்விக்கு அனுரவிடம் பதில் இல்லையா! கனடாவில் நடந்த சலசலப்பு… | Anura Have No Answer Question The Tamils Canada

கடந்த காலத்தில் ஈழத் தமிழ் மக்களை அழித்தொழிக்க ஜேவிபி ஆதரவு வழங்கியதாகவும் இப்போது என்ன முகத்துடன் கிளிநொச்சியில் வந்து மாநாடு நடத்துகிறார்கள் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் போருக்குப் பிறகு ஜேவிபி கிளிநொச்சியில் அரசியல் செய்ய களமிறங்கியது.

அவர்களின் கட்சி அலுவலகங்கள் திறக்கப்பட்டன. கிளிநொச்சி மாவட்டத்தில் தேர்தல்களிலும் போட்டியிட்டார்கள். மகிந்தவுடன் இணைந்த ஜேவிவி பிரியும்போது ஜேவிபியைவிட்டு விலகி மகிந்தவுக்கு ஆதரவு அளித்தவர் விமல் வீரவன்ச.

முன்னைய காலத்தில் ஜேவிபியின் முக்கியஸ்தராகவும் பின்னைய காலத்தில் அக் கட்சிக்கு எதிராகவும் மாறிய விமல் வீரவன்ச ஜேவிபி கிளிநொச்சியில் பெற்ற வாக்குகள் குறித்து கேலி செய்தார்.

அதாவது அக் கட்சியில் போட்டியிட்டவர்களும் அவர்களின் குடும்பத்தினரும்கூட கட்சிக்கு வாக்களிக்கவில்லை என்று விமல் வீரவன்ச கிண்டல் அடித்தார். அதற்கு காரணம் அவரும் தான்.

அவர்கள் அனைவரும் இணைந்த ஜேவிபிக்கே மக்கள் எதிர்ப்பை காட்டியிருந்தனர்.

ஈழத் தமிழர்களின் கேள்விகள்

இதற்கு அடிப்படையாக ஈழத் தமிழ் மக்களிடம் உள்ள கேள்விகளுக்கு அனுரகுமார திஸாநாயக்கா தலைமையிலான ஜேவிபி பதில் அளிக்க வேண்டும்.

கிளிநொச்சியில் நடந்த கூட்டத்திலும் அனுர இந்த விடயம் குறித்து மௌனியாக இருந்துள்ளார். அதேபோல அதன் எதிரொலியாக அமைந்த கனடா கூட்டத்திலும் ஈழத் தமிழ் மக்கள் தொடுத்த கேள்விகளுக்கு அனுராவினால் பதில் அளிக்க முடியாது போயுள்ளது.

தமிழர்களின் கேள்விக்கு அனுரவிடம் பதில் இல்லையா! கனடாவில் நடந்த சலசலப்பு… | Anura Have No Answer Question The Tamils Canada

கடந்த காலத்தில் வடக்கு கிழக்கை பிரிக்க சட்ட ரீதியாக ஜேவிபி நடவடிக்கை எடுத்து வடக்கு கிழக்கை பிரித்திருந்தது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் உள்ள ஈழத் தமிழர்களுக்குச் சாதகமான ஒரே ஒரு விடயமாக வடக்கு கிழக்கு இணைப்பு காணப்பட்டது.

சந்திரிக்கா, மகிந்த போன்ற பேரினவாதிகள்கூட பிரிக்காத வடக்கு கிழக்கை ஜேவிபி நீதிமன்றம் சென்று பிரிந்திருந்தது தான் அக் கட்சி இழைத்த வரலாற்று அநீதி.

இப்படியிருக்கையில் இன்று வடக்கு கிழக்கு மக்களின் வாக்கை எடுப்பதற்காக உங்களில் அக்கறை வைத்துள்ளோம் என்று ஜேவிபி வருகின்றபோது எப்படி ஈழத் தமிழர்கள் நம்ப முடியும்?

இதேவேளை வடக்கு கிழக்கை பிரித்த ஜேவிபி ஈழத் தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வை முன்வைக்கும் என்றுதான் நம்ப இயலுமா? அன்றைக்கு இடைக்கால நிர்வாக சபையை விடுதலைப் புலிகள் தரப்புக்கு வழங்கும் ஒரு நிலை ஏற்பட்ட போது அமைச்சரவையில் இருந்து விலகி ஜேவிபி அதனை கடுமையாக எதிர்த்தது.

ராஜபக்சக்களை காக்கும் இன்னொரு ரணிலா?

அத்துடன், நடந்த காலத்தில், பயங்கரவாதிகளுடன் சமானதம் பேசாதே அவர்களை அழிக்க போரை தொடங்குங்கள் என்று மகிந்த ராஜபக்சவுக்கு அழுத்தம் கொடுத்த தரப்பாக ஜேவிபி யுத்த வெற்றியில் பெருமை கொள்கிறது.

அப்படிப்பாட்ட ஜேவிபியும் நடந்த இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்கு பொறுப்பு வகிப்பவர்களே? எனவே நடந்தது இனப்படுகொலை என்றும் அதற்கு நீதி வேண்டும் என்றும் வடக்கு மாகாண சபை தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.

வடக்கு கிழக்கு மக்களின் இந்தக் கோரிக்கைக்கு ஜேவிபியின் பதில்தான் என்ன? இலங்கையில் நடந்த குற்றங்களுக்கான உண்மையை கண்டறிய நீங்கள் பரிந்துரைக்கும் வழிமுறை என்ன? என்ற கேள்வியை கனடாவில் ஈழத் தமிழர்கள் முன்வைத்துள்ளனர்.

தமிழர்களின் கேள்விக்கு அனுரவிடம் பதில் இல்லையா! கனடாவில் நடந்த சலசலப்பு… | Anura Have No Answer Question The Tamils Canada

 

எந்தவொரு கேள்விக்கும் அனுர பதில் அளிக்காமல் கொழும்பிற்கு கேள்விகளை அனுப்பி கலாந்தாலோசித்த பின்னரே பதில் வழங்க முடியும் என்று விசித்திரமாகக் கூறியுள்ளார்.

இத்தகைய தலைவர் ஒருவர்தான் நாளை சிறிலங்காவை ஆளப் போகின்றார். பேரினவாத அரசியலை அறிவுபூர்வமாகவும் நுணுக்கமாகவும் முன்னெடுக்கும் அனுரகுமார போன்றவர்கள், இனப் படுகொலையாளிகளைப் பாதுகாப்பதில், ராஜபக்சக்களை காப்பதில் இன்னொரு ரணிலாக இருப்பார்கள் என்று மாத்திரம் தெரிகின்றது.

சிறிலங்காவை ஆள வருகிறவர்கள் எல்லோருமே ஈழத் தமிழ் மக்களை இன்னொரு தேசத்தினராக ஆக்கிரமித்து அழித்து முடிக்கின்ற தீர்வை மாத்திரமே கொண்டுள்ளனர்.

அதில் ஒருவரே அனுரவும். இவரும் இன்னொரு ரணிலாக இன்னொரு ராஜபக்சவாகவே உள்ளார். அதனையே கனடாவிலும் கிளிநொச்சியிலும் ஈழத் தமிழர்களின் நீதியும் நியாயமும் கொண்ட கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் தப்பிய அனுரவின் தப்புதலில் இருந்து மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகின்றது.

தீபச்செல்வன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More