ரஷ்யாவின் முன்னணி எதிர்க்கட்சித் தலைவரும், ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் ஒடுக்குமுறைக்கு எதிரான முக்கிய விமர்சகருமான அலெக்ஸி நவல்னிக்கு இரண்டு ஆண்டுகள் மற்றும் எட்டு மாதங்கள் சிறைத் தண்டனையை மொஸ்கோ நீதிமன்றம் விதித்துள்ளது.
ஒரு வருடத்திற்கு முந்தைய மோசடி வழக்கில் பரோல் மீறல் குற்றச்சாட்டினை அடிப்படையாகக் கொண்டே அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மொஸ்கோவில் உள்ள சிமோனோவ்ஸ்கி மாவட்ட நீதிமன்றம் நவல்னிக்கு தனது பரோலின் விதிமுறைகளை மீறியதாக தீர்ப்பளித்த பின்னர் மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
ஆனால் ஏற்கனவே வீட்டுக் காவலில் இருந்த காலத்திற்கு அவரது சிறைத் தண்டனை குறைக்கப்பட்டு நவல்னி இரண்டு ஆண்டுகள் மற்றும் எட்டு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் இந்த உத்தரவுக்கு எதிராக நவல்னியின் வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே மெஸ்கோவின் வழக்கு விசாரணையின்போது நீதிமன்றக் கட்டிடத்திற்கு வெளியில் நடந்த போராட்டங்களில் நூற்றுக்கணக்கான முக்கிய எதிர்க்கட்சி ஆதரவாளர்களை பொலிஸார் தடுத்து வைத்தனர்.
அதேநேரம் சுயாதீன கண்காணிப்புக் குழுவின் தகவல் படி, ரஷ்யா முழுவதும் 1,000 க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டும் உள்ளனர்.
ஜனவரி 17 ஆம் திகதி ஜேர்மனின் பேர்லினில் இருந்து மொஸ்கோவுக்குத் திரும்பியபோது நவல்னி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.