கிறிஸ்துமஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அகதி குடும்பம் அகதிகளாகத் தகுதிப் பெறவில்லை என்றும் ஆஸ்திரேலியா தனது வலுவான எல்லைக் கொள்கையைத் தொடர்ந்து நடைமுறையில் வைத்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் ஆஸ்திரேலிய தேசிய கட்சியின் மேலவை உறுப்பினர் மேட் கேனவன்.
ஆஸ்திரேலிய அரசால் கிறிஸ்துமஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அகதி குடும்பமான பிரியா- நடேசலிங்கம் மற்றும் அவரது குழந்தைகளை விடுவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வரும் நிலையில் இப்படியொரு கருத்தை அவர் முன்வைத்திருக்கிறார்.
“ஆஸ்திரேலியா அகதிகளை ஏற்றுக் கொள்வதில் கண்டிப்பான முறையை கையாள வேண்டும். இக்குடும்பம் நீதிமன்றத்தால் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இம்முடிவிற்கு எதிராக நீதிமன்றத்தில் அவர்கள் வழக்குத் தொடுத்திருக்கின்றனர். அது அவர்களின் உரிமை,” எனக் கூறியுள்ளார் மேட் கேனவன்.
“நாம் மிகவும் நிலையான, கடுமையான எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கொண்டுள்ளோம். அது வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது,” என அவர் தெரிவித்திருக்கிறார்.
இந்தச் சூழலில், இத்தமிழ் அகதி குடும்பத்தை அமெரிக்கா அல்லது நியூசிலாந்தில் குடியமர்த்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஆஸ்திரேலிய உயர்மட்ட தகவல்கள் குறிப்பிடுகின்றன.